லண்டன் உயர் நீதிமன்றத்தில் நிரவ் மோடி கோரிக்கை நிராகரிப்பு!

இந்தியாவுக்கு நாடு கடத்தும் விவகாரத்தில், பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய அனுமதிக்கும்படி வைர வியாபாரி நிரவ் மோடி வைத்த கோரிக்கையை, லண்டன் உயர் நீதிமன்றம் நிராகரித்து உள்ளது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வைர நகை வியாபாரி நிரவ் மோடி மீது, 11 ஆயிரத்து 600 கோடிக்கும் அதிகமாக சட்ட விரோத பரிவர்த்தனையும், ரூ.280 கோடி மோசடி செய்ததாகவும் பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் அளித்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், நிரவ் மோடி கடந்த 2018 ஆம் ஆண்டே நாட்டி விட்டு வெளியேறி விட்டார். அவரை தேடப்படும் குற்றவாளிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வெவ்வேறு பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி வெவ்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வந்த நிரவ் மோடி, லண்டனில் இருப்பதாக இந்திய அரசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று, இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் கடந்த 2019ஆம் ஆண்டு நிரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டு வாண்ட்ஸ்வா்த் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிகளில் இந்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று தீா்ப்பளித்தது. இந்தத் தீா்ப்புக்கு எதிராக லண்டன் உயா் நீதிமன்றத்தில் நிரவ் மோடி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கில் கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் தேதி தீர்ப்பு அளித்த லண்டன் உயர் நீதிமன்றம், வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று தீா்ப்பு அளித்தது சரியே என்று தீர்ப்பு அளித்தது.

இதை அடுத்து, இந்த வழக்கில், பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய அனுமதி அளிக்கும்படி, லண்டன் உயா் நீதிமன்றத்தில் நிரவ் மோடி தரப்பில் முறையிடப்பட்டது. இந்நிலையில் நேற்று, நிரவ் மோடியின் கோரிக்கையை லண்டன் உயர் நீதிமன்றம் நிராகரித்து உள்ளது. இது, நிரவ் மோடிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தை நிரவ் மோடி அணுகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.