பரந்தூர் விமான நிலையம் குறித்து மக்களின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவி சாய்க்க வேண்டும்: சீமான்

எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களோடு நிற்பது போல் நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அதே மக்களினுடையக் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிப்பதா? என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் 146 நாட்களாக தொடர்ந்து போராடி வருவதன் நீட்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி இன்று நடைபயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், அதனை அச்சுறுத்தும் விதமாக அதிக அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருப்பது அரச பயங்கரவாதத்தின் அடையாளமாகும். மக்களின் தொடர் கோரிக்கையினை மதிக்காமல் வானூர்திநிலையம் அமைப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியதே எதேச்சதிகாரத்தினைக் காட்டும் நிலையில், அதனை எதிர்த்து மக்களாட்சி உரிமைக்கொண்டுப் போராடுபவர்களை அச்சுறுத்துவது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

அழிவுத் திட்டங்களை தொடர்ந்து மக்கள் எதிர்த்து வரும் நிலையில் எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களோடு நிற்பது போல் நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அதே மக்களினுடையக் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிப்பதா?. எனவே, உடனடியாக காவல்துறையினரை அப்பகுதிகளில் இருந்து விலகச் செய்வதோடு உரிய நியாயங்களோடுப் போராடும் மக்களின் கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு செவி சாய்க்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.