பரந்தூர் விமான நிலையம்: சித்தார்த் உள்ளிட்ட பிரபலங்கள் கடிதம்!

பரந்தூரில் விமான நிலையம் அமைக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன், நடிகர் சித்தார்த், முன்னாள் விமானி கேப்டன் மோகன் ரங்கநாதன் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பிய அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க பரந்தூர் பகுதியில் கட்டுமானங்கள் ஏற்படுத்த இருக்கும் நிலம், அடையாற்றின் தென்மேற்கு நீர் பிடிப்புப் பகுதியின் 500 சதுர கி.மீ. பரப்புக்குள் அமைந்துள்ளது. மழைக்காலங்களில் இந்த பகுதியிலிருந்து வரும் நீர், செம்பரம்பாக்கத்திலிருந்து வெளியேறும் நீருடன் அடையாற்றில் சேர்கிறது. இதன் காரணமாக கடந்த 2015ஆம் ஆண்டு மணிமங்கலம், பெருங்களத்தூர், தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் போன்ற பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுகுறித்து இந்திய அறிவியல் நிறுவனம் (Indian Institute of Science), பல்துறை இடையிலான நீர் ஆராய்ச்சி மையம் (Inter Disciplinary Centre for Water research)ஆகியவை நடத்திய ஆய்வில் கடந்த 2015 ஆம் ஆண்டு மழை வெள்ளத்தில் செம்பரம்பாக்கம் ஏரி மட்டுமல்லாது, மற்ற காரணங்களும் முக்கிய பங்காற்றின என குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்றைய மழை வெள்ளம் அடையாறு வழியாக மாநகருக்குள் நுழையும் போது 3,800 கனமீட்டராக (1லட்சத்து 34 ஆயிரம் கனஅடி) இருந்தது. அடையாற்றின் கொள்ளளவு வினாடிக்கு 2 ஆயிரத்து 28 கன மீட்டர் மட்டுமே என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பரந்தூர் விமான நிலையம் அமையவுள்ள இடம் உள்ளடக்கிய பகுதியிலிருந்து 3 ஆயிரம் கன மீட்டர் நீர் அடையாற்றுக்கு வந்துள்ளது. அடையாற்றின் கொள்திறனை அதிகரிக்க முடியாது. நீரியல் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஆற்றின் கரையில் 18 சதுர கி.மீ. பரப்பில் நீர் மண்ணுக்குள் ஊடுருவ முடியாத தளத்தை ஏற்படுத்துவது பேரிடரை கூவி அழைப்பதாகும். பரந்தூர் விமான நிலையத்திற்குத் திட்டமிடுபவர்கள், அதனால் சென்னைக்கு என்ன பாதிப்பு என்பதை யோசிக்க வேண்டும். எனவே பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பரந்தூரில் 2ஆவது விமான நிலையம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக ஏகனாபுரத்தில் இருந்து போராட்டக்காரர்கள் வாயில் கருப்புத் துணிக் கட்டியும், கருப்புக் கொடி ஏந்தியும் நேற்று பேரணியாக சென்றனர். அப்போது அவர்களிடம் மாவட்ட நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரினர். இதையடுத்து அமைச்சர்கள் எ.வ.வேலு, தாமோ அன்பரசன், தங்கம் தென்னரசு ஆகியோரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்த நிலையில் இன்றைய தினம் போராட்டக்காரர்களுடன் அமைச்சர்கள் குழு தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க விடமாட்டோம் என அமைச்சர்களிடம் உறுதியாக தெரிவித்துவிட்டோம். அத்துடன் விமான நிலையம் அமைப்பதால் என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்பதையும் தெளிவாக கூறிவிட்டோம் என போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.