ரயில்வேயில் 80% பணியிடங்கள் வட இந்தியர்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது: அன்புமணி

தெற்கு ரயில்வேயில் 80 சதவீதப் பணிகள் வட இந்தியர்களுக்கு தாரைவார்க்கப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தெற்கு ரயில்வேயின் பல்வேறு நிலைகளில் 964 பணியிடங்களை நிரப்புவதற்காக அண்மையில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வுகளில் 80 விழுக்காட்டுக்கும் கூடுதலான இடங்களை வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் கைப்பற்றியுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே தேர்வாகி இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் வெளிமாநிலத்தவர்கள் திட்டமிட்டு திணிக்கப்படுகிறார்களோ என்ற ஐயத்தையும் இது எழுப்பியிருக்கிறது.

தெற்கு ரயில்வே, ஐசிஎப் எனப்படும் தொடர்வண்டி பெட்டித் தொழிற்சாலை ஆகியவற்றுக்கு கூட்ஸ் கார்டுகள், இளநிலை கணக்கு உதவியாளர் மற்றும் தட்டச்சர், முதுநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர் உள்ளிட்ட ஐந்தாம், ஆறாம் நிலை பணிகளுக்கு சென்னையில் உள்ள ரயில்வே பணியாளர் வாரியம் மூலம் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டன. 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் முதல் 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி வரை நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் முடிந்த பிறகு, 964 பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன. பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 200 பேர் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல. மேலும், தேர்வானவர்களில் 750-க்கும் மேற்பட்டவர்கள் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வர்கள் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் பெயர்களைத் தேடித்தேடி பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. மாறாக, பட்டியலில் பாண்டேக்கள், சவுத்திரிகள், சவுகான்கள், மீனாக்கள், பிஸ்வாஸ்கள், குமார்கள் தான் எங்கும் நிரம்பியிருக்கிறார்கள்.

தெற்கு ரயில்வே மற்றும் ஐசிஎப் தொழிற்சாலைக்கு சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுவையில் தான் அதிக பணியிடங்கள் உள்ளன. எனவே, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக அளவிலும், அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குறைந்த அளவிலும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் அது நியாயமானதாக இருந்திருக்கும். ஆனால், 80% பணியிடங்களில் வட இந்தியர்கள் உள்ளிட்ட வெளி மாநிலத்தவரை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை நியாயப்படுத்த முடியாது. மேலும், இதில் ஏதேனும் முறைகேடுகள் நடந்ததா? என்பது பற்றி விசாரிக்க வேண்டும். ரயில்வே, வங்கிப் பணி, அஞ்சல் துறை, என்எல்சி என அனைத்து பொதுத்துறை நிறுவனப் பணிகளின் வேலைவாய்ப்புகள் முழுக்க முழுக்க வட இந்தியர்களால் தான் கைப்பற்றப்படுகின்றன. தேர்வு முறையும், தேர்வு மைய கண்காணிப்பும் இதற்கு சாதகமாக வடிவமைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. இவற்றைக் கடந்து தமிழக அரசுப் பணிகளிலும் வட இந்தியர்கள் நுழையத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு, பொதுத்துறை பணிகளில் 80 முதல் 90 விழுக்காட்டையும், தமிழக அரசு பணிகளில் சிலவற்றையும் வட இந்தியர்கள் பறித்துக் கொண்டால், தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவு கருகி விடும்.

எனவே, பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போல, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள இடைநிலை மற்றும் கடைநிலை பணிகள் அனைத்தும் முழுக்க முழுக்க உள்ளூர் மக்களைக் கொண்டே நிரப்பப்படும் வகையில் 100% மாநில ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மத்திய அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அதிகாரிகள் பணியிடங்களில் 50% மாநில ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் கொண்டு வரப்பட்டிருப்பதை போன்று, பிற தேர்வாணையங்கள் நடத்தும் தேர்வுகளிலும் தமிழ் பாடத் தாள் கட்டாயமாக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள தனியார் பெரு நிறுவனங்களின் அமைப்பு சார்ந்த பணிகளில் 80 விழுக்காட்டை தமிழக மக்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்கி சட்டப்பேரவையில் சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.