சீனாவில் பரவும் ஒமைக்ரான் தொற்று இந்தியாவில் கண்டுபிடிப்பு!

சீனாவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் ஒமைக்ரான் தொற்றின் உருமாறிய பிஎப் 7 (BF.7) வகை தொற்று இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமாக கருதப்படும் அண்டை நாடான சீனாவில், கடந்த சில வாரங்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அடுத்த மூன்று மாதங்களுக்குள் சீன மக்கள் தொகையில் சுமார் 60 சதவீதம் பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் உருமாறிய பிஎப் 7 வகை தொற்று சீனாவில் தற்போது பரவி வரும் கொரோனா பரவலுக்கு முக்கிய காரணம் என கண்டறியப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, கொரோனா பரிசோதனைகளை துரிதப்படுத்துவது, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கி விடுவது, பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சீனாவில் கட்டுக்கடங்காமல் பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும், ஒமைக்ரான் தொற்றின் உருமாறிய பிஎப் 7 வகை தொற்று, ஏற்கனவே, இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக, மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது. அதாவது, இந்தத் தொற்றின் முதல் பாதிப்பு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, குஜராத் மாநிலத்தில் கண்டறியப்பட்டதாகவும், இதைத் தொடர்ந்து மேலும் ஒருவருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதாகவும், ஒடிசா மாநிலத்திலும் ஒருவருக்கு பிஎப் 7 வகை கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது வரை பிஎப் 7 வகை தொற்றால் நான்கு பேர் பாதிக்கப்பட்டதாகவும், அவர்கள் குணமடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும், இந்த வகை கொரோனா தொற்று இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.