தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி பார்: ஓ.பன்னீர்செல்வம் சவால்!

தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி பார். கட்சியை கபளிகரம் செய்ய நினைத்தால் அது, ஒரு போதும் நடக்காது என்று ஓ.பன்னீர்செல்வம் ஆவேசமாக பேசினார்.

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்து ஆட்சியை பறிகொடுத்தது. இதன் பின்னர், அதிமுகவை வழிநடத்துவது யார்? என்பதில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடையே நேரடியாக மோதல் ஏற்பட்டது. இதன் ஒரு பகுதியாக அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். இதையடுத்து கடந்த ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழு மற்றும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டது செல்லாது என உத்தரவிட கோரி நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை தற்போது உச்சநீதி மன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் நிலுவையில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். மேலும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என கூறி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், ‘நாங்களே உண்மையான அதிமுக’ என, முழக்கமிட்டு வருகின்றனர். மேலும் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி கலைக்கப்பட்டு விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தீர்மானம் நிறைவேற்றி இருக்கும் நிலையில் அந்த பதவியில் தற்போதைய சூழலில் ஓ.பன்னீர்செல்வம் நீடித்து வருவதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

அத்துடன் நிறுத்தி கொள்ளாமல் எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளை ஓ.பன்னீர்செல்வம் நியமனம் செய்து வருகிறார். அந்த வகையில் 88 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் 100க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகளை அடுத்தடுத்து நியமனம் செய்து எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.

இந்த பரபரப்பான சூழலில் அதிமுக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் சென்னை, வேப்பேரி ரித்தர்டன் சாலையில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார். இந்த ஆலோசனைக்கூட்டம் அதிமுக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் திட்டமிட்டபடி நடந்தது. இக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என 200 பேர் கலந்து கொண்டனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக ரித்தர்டன் சாலையில் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அங்கு வைக்கப்பட்டு இருந்த புத்தகத்தில் கையெழுத்து போட்டு மண்டபத்துக்குள் சென்றனர். இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மத்தியில் பேசியதாவது:-

எனக்கு சோதனை வந்தபோது என்னை தாங்கி பிடித்தவர்கள் தொண்டர்கள் தான். பல சோதனைகள் கண்ட கட்சி அதிமுக. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் இந்த கட்சியை சிறப்பாக வழி நடத்தி சென்றனர்.
ஜெயலலிதா தான் நிரந்தரப் பொதுச்செயலாளர் என்று தீர்மானம் கொண்டு வந்தோம். அந்த தீர்மானத்தை ரத்து செய்ய, மனம் எப்படி வந்தது? அந்த மகா பாவிகளை இந்த நாடு மன்னிக்காது. ஜெயலலிதாதான் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் என தொண்டர்கள் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஓபிஎஸ் என்ற சாதாரண தொண்டன் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக வர முடியும் என்பதை இந்த கட்சி காட்டி உள்ளது. என்ன மணி அடித்தாலும் பப்பு வேகாது. தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி பார் என சவால் விடுத்தார். கட்சியை கபளிகரம் செய்ய நினைத்தால் அது, ஒரு போதும் நடக்காது. இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் ஆவேசமாக பேசினார்.

இதன் பிறகு ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-

ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டிய தருணம் இது. நாடாளுமன்ற தேர்தலில் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முடிவெடுக்கப்படும். நாடாளுமன்றத்தேர்தலில் எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும்.
தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் எங்களுக்கு தான் இரட்டை இலை சின்னத்தை வழங்கும். தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்ட வரவு செலவு கணக்கானது நான் பொருளாளராக இருந்தபோது கொடுத்தது.
பொதுக்குழு முறையாக நடக்கும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இறுதி வெற்றி எங்களுக்கு தான். இணைய கூடாது என்ற எண்ணம் எடப்பாடிக்கு மட்டும் தான் உள்ளது. இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கி தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:-

வரலாற்று சிறப்பு மிக்க இந்த அதிமுக ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை தாங்கும் வாய்ப்பினை எனக்கு அளித்ததுக்கு நன்றி. எம்ஜிஆர் தொடங்கிய கட்சியை காப்பாற்ற அனைவரும் கூடி இருக்கிறோம். இங்கு உள்ளவர்களுக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆசி உண்டு என்பதை அதிகாரப்பூர்வமாக கூறுகிறேன். நமது சமுதாய கட்டமைப்பில் உழைப்போர் தாழ்ந்தோராக இருப்பார். ஆனால் எம்ஜிஆர் கையெழுத்து போட்டால் உழைப்போரே உயர்ந்தவர் என, எழுதித் தான் கையெழுத்து போடுவார். எனவே உழைப்போரை காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக. கவிதையில் இடைச்செருகல்களை கற்றறிந்த புலவர்கள் அகற்றுவார்கள். அதேப் போல், அதிமுக எனும் இந்த மாபெரும் இயக்கத்தில் உள்ள இடைச்செருகல்களை அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார்.