விஜய்யின் வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா ரத்து?

விஜய் நடித்துள்ள வாரிசு தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா நாளை மாலை சென்னையில் நடைபெறுகிறது. வாரிசு ஆடியோ லான்ச் என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் ட்ரெண்டாகி வந்த நிலையில், தற்போது முக்கியமான தகவல் கிடைத்துள்ளது. அதன்படி இறுதிநேரத்தில் வாரிசு இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் வாரிசு படம் பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது. மேலும், வாரிசு இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தவும் படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, நாளை மாலை 4 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த விழாவில் டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் வாரிசு இசை வெளியீட்டு விழாவுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. அதன்படி வாரிசு இசை வெளியீட்டு விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் தான் இதற்கு காரணம் எனவும் சொல்லப்படுகிறது. கடந்த சில தினங்களாக சீனாவில் கொரோனா பரவல் உச்சம் தொட்டுள்ளதோடு, உயிரிழப்புகளும் மீண்டும் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. மேலும், சீனாவில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருவதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக மீண்டும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் வேகப்படுத்தி வருகின்றன. பொதுஇடங்களில் மாஸ்க் கட்டாயம் என பல மாநிலங்களில் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஏசி அரங்குகள் உட்பட மற்ற இடங்களிலும் மக்கள் அதிகளவில் ஒன்றுகூட வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

இதனால் நாளை நடைபெறவுள்ள வாரிசு இசை வெளியீட்டு விழாவை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. விஜய்யின் படவிழா என்பதால், ரசிகர்கள் அதிகளவில் ஒன்றுகூட வாய்ப்புள்ளது. அப்போது கொரோனா பரவல் ஏற்பட்டால் அது விபரீதமாகிவிடும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் படக்குழுவினருக்கு எச்சரிக்கை செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் வாரிசு இசை வெளியீட்டு விழா சொன்னபடி நடக்குமா என்பதே கேள்விக்குரியாகியுள்ளது.