நடிகை கனகா வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசம்!

நடிகை கனகா வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தமிழில் கரகாட்டக்காரன், அதிசய பிறவி, கும்பக்கரை தங்கய்யா, தாலாட்டு கேக்குதம்மா, சாமுண்டி, கோயில் காளை, சக்கரை தேவன், விரலுக்கேத்த வீக்கம் உள்பட பல்வேறு வெற்றி படங்களில் நடித்து பிரபலமானவர் கனகா. மறைந்த பழம் பெரும் நடிகையான தேவிகாவின் மகளான இவர் 1989 ஆம் ஆண்டு இயக்குனரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன், இயக்கத்தில் வெளியான ‘கரகாட்டக்காரன்’ படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி வசூலில் சக்கை போடு போட்டது. இந்த படத்தில் நடித்த அனைவரும் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர். அந்த வகையில் இந்த படத்தில் நடித்ததன் மூலம் கரகாட்டக்காரன் கனகா என்று அழைக்கும் அளவிற்கு பிரபலமானார் நடிகை கனகா.

சுமார் கடந்த 20 ஆண்டுகளாக திரையுலகை விட்டு விலகி இருக்கும் கனகா தனது தந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் புரத்தில் உள்ள கனகாவின் வீட்டில் நேற்று மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அவர் வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றும் போது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மயிலாப்பூர் மற்றும் தேனாம்பேட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த தீ விபத்தால் கனகா வீட்டிலுள்ள துணிமணிகள் அத்தனையும் எரிந்து நாசம் ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.