‘வாடிவாசல்’ படம் கண்டிப்பாக துவங்கும்: சூர்யா

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘வாடிவாசல்’ படம் கைவிடப்பட்டுள்ளதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் சூர்யா. ‘வாடிவாசல்’ படம் கண்டிப்பாக துவங்கும் என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் சூர்யா. இவருக்கென தனியொரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் தனது அகரம் பவுண்டேசன் மூலம் ஏராளமான மாணவர்களை படிக்க வைத்துவருகிறார். அதுமட்டும் இல்லாமல் கல்வி சார்ந்த பிரச்னைகளிலும் தனது குரலை தவறாமல் பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் தனது ரசிகர்களுடனான சந்திப்பில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார். சூர்யா பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இதன் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வந்தது. ஜிவி பிரகாஷ் குமார் இசையில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இந்தப்படத்திலிருந்து சூர்யா திடீரென விலகுவதாக அறிவிக்கப்பட்டது. கதை பிரச்சனை காரணமாக அவர் இந்த்ப்படத்திலிருந்து விலகுவதாக கூறப்பட்டது.

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42 வது படத்தில் நடித்து வருகிறார். முதல் முறையாக இயக்குநர் சிவாவுடன் சூர்யா இணைந்துள்ளார். சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், அண்ணாத்த போன்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் சிவா. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படம் 3டி-யில் உருவாகவுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க உள்ளார். மேலும் சுமார் 10 மொழிகளில் இந்த படத்தை பான் இந்தியா படமாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு துவங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் சூர்யா சமீபத்தில் மாவட்ட வாரியாக ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது ரசிகர்களுக்கு வாக்குறுதிகளை அளித்துள்ளார். தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளில் யாரேனும் படித்த இளைஞர்கள் இருந்தால் அவர்களின் மேற்படிப்புக்கு உதவ தான் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி போட்டித் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் இருந்தால் அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் அளித்து அரசு பணி கிடைக்க உதவுவதாவும் தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் இந்த அறிவிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த சந்திப்பில் ‘வாடிவாசல்’ படம் கண்டிப்பாக துவங்கும் என்றும் தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் சூர்யா நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட இந்தப்படம் கைவிடப்பட்டுவிட்டதாக இணையத்தில் வதந்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.