மகன்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா!

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் தங்களின் மகன்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளனர்.

நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. சமூக வலைதளங்களில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் தங்களின் இரட்டை மகன்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வரும் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் 9ஆம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு தாய்லாந்தில் முதல் ஹனிமூனை நிறைவு செய்த விக்னேஷ் சிவனும் நயன்தாராவும், இரண்டாவது ஹனிமூனை ஸ்பெயின் மற்றும் துபாயில் கொண்டாடினர். இதைத் தொடர்ந்து இருவரும் வாடகை தாய் மூலமாக இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தங்களின் மகன்களுடன் இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்த இயக்குனர் விக்னேஷ் சிவன், தானும் நயன்தாராவும் அப்பா அம்மா ஆகிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனை தொடர்ந்து அவர்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்தன. இதனைத் தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு தங்களின் மகன்களுடன் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் வாழ்த்து தெரிவித்து போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டனர்.

இந்நிலையில் தற்போது கிறிஸ்துமஸை முன்னிட்டு மகன்களுடன் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தங்களின் மகன்களுக்கு சாண்டா கிளாஸை போன்று சிவப்பு நிற உடை அணிவித்துள்ள விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் தங்களின் குழந்தைகளை கையில் ஏந்தி போஸ் கொடுத்துள்ளனர். தனது கணவரின் கையில் உள்ள தனது மகனை பார்த்து அப்படி சிரிக்கிறார் நயன்தாரா. இந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள விக்னேஷ் சிவன், உயிர், உலகம், நயன், விக்கி மற்றும் குடும்பத்தினரின் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். மேலும் மிகுதியான அன்பு! நீங்கள் எப்பொழுதும் கனவு காணும் வாழ்க்கையை வாழ அனைவருக்கும் எல்லா மகிழ்ச்சியையும் ஆசீர்வாதங்களையும் தர கடவுளிடம் நேர்மையான பிரார்த்தனைகள்! கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.