பாஜக அல்லாத மாநிலங்களில் உளவு பார்க்க கவர்னர்கள் நியமிக்கப்படுகின்றனர்: சீமான்

பாஜக அல்லாத மாநிலங்களில் உளவு பார்க்க கவர்னர்கள் நியமிக்கப்படுகின்றனர் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என முதலில் வலியுறுத்தியது நாம் தமிழர் கட்சிதான். நீண்டகாலமாக அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் செய்திருக்க வேண்டும். புதுவையின் பெரிய துறைகளை மாகே, ஏனாமை சேர்ந்தவர்கள் எடுத்துக்கொள்கின்றனர். புதுவைக்கு மாநில அந்தஸ்துக்காக தொடர்ந்து போராடுவோம்.

ரங்கசாமி காங்கிரஸ் முதலமைச்சராக இருந்தபோதே கேட்டிருக்க வேண்டும். தமிழகத்தில் இந்தியா என் நாடு என வராததற்கு பல காரணம் உண்டு. கச்சத்தீவை மீட்க முடியாது, மீத்தேன், ஈத்தேன் எடுக்க அனுமதிக்கிறார்கள். இதனால் பிரச்சினை எழுகிறது. நாம் தமிழர் கட்சி தனித்துதான் போட்டியிடும். உலகில் தனி மனித சிந்தனையிலிருந்து கிளம்பியதுதான் புரட்சி. ரங்கசாமி கூட்டணி ஆட்சிதான் மத்தியில் உள்ளது. மாநில அந்தஸ்து பெற வேண்டும். இல்லாவிட்டால் கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும். ரங்கசாமிக்கு கொள்கையோ, கோட்பாடோ இல்லை. அவருக்கு எது சரியோ, அதை செய்கிறார்.

மக்களாட்சிக்கு கவர்னரே தேவையில்லை என்பதுதான் எங்கள் கருத்து. பாஜக அல்லாத மாநிலங்களில் உளவு பார்க்க கவர்னர்கள் நியமிக்கப்படுகின்றனர். தெலுங்கானாவில் சந்திரசேகர்ராவ் பிரதமருக்கு எதிராக உள்ளார். புதுவை சிறிய மாநிலம். காங்கிரஸ் தவிர பிற கட்சிகள் பாஜவிடம் சரணடைந்துவிட்டன. புதுவையை பிடித்துவிட்டால் தென் தமிழகத்தை பிடித்துவிடலாம் என பாஜவினர் நினைக்கின்றனர். பாஜக நினைப்பதையெல்லாம் திமுக அரசு விரைந்து செயல்படுகிறது. பாஜக ஆளும் மாநில அரசுகளை விட வேகமாக மத்திய அரசு அறிவிப்புகளை திமுக அரசு வேகமாக செயல்படுகிறது.

அதிமுகவில் யாரையும் கட்டுப்படுத்த முடியாததால் ஒருவருக்கொருவர் பேசுகின்றனர். இதற்கு வலுவான தலைமை இல்லாததுதான் காரணம். ரங்கசாமி பதவியில் இருந்துவிட்டார். நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் போய்விட்டது. இருப்பதை காப்பாற்றிவிட்டு போய்விடுவோம் என நினைக்கிறார்.

9 ஆண்டு பாஜக மத்தியில் ஆட்சியை முடித்துவிட்டது. ஏதாவது ஒரு நல்லது நாட்டுக்கு செய்துள்ளீர்களா? அடித்தட்டு மக்களின் வரியை இரண்டரை லட்சம் கோடி கடனாக அதானிக்கு வழங்கியதை தவிர வேறு என்ன நல்லது செய்துள்ளது? வாரிசு என்றாலே படம் என்றாலும், பதவியாக இருந்தாலும் பிரச்சினைதான். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை தவிர்க்க வேண்டும். எங்கள் முன்னோர்களை எங்கள் பாடத்திட்டத்தில் படிப்போம். ஆனால் வட இந்திய வரலாறை திணிக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.