அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கின்றாம்: எடப்பாடி பழனிசாமி

அதிமுக தலைமையில் தான் மெகா கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கின்றாம் என்று பழனிச்சாமி கூறியுள்ளார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் வரக்கூடிய லோக்சபா தேர்தல் மற்றும் தேர்தலுக்கான கூட்டணி, கட்சி தொடர்பான வழக்கு போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டன.

கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ‛பொருட்களில் போலியானவற்றை பார்த்திருப்போம். அதுபோல் அரசியலில் போலியானவர் ஓபிஎஸ். கட்சியிலிருந்து அவர் ஒதுக்கப்பட்டதில் மாற்றம் ஏதும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி தொடர்ந்து செயல்படும்’ என்றார்.
அதேபோல் அதிமுக.,வில் எந்த சூழலிலும் ஓபிஎஸ் அணியினரை இணைக்க கூடாது என மாவட்ட செயலாளர்கள் ஒருமித்த குரல் எழுப்பினர்.

கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

திமுகவின் பி டீமாக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார். அவருடன் இணைந்து செயல்படுபவர்கள் அனைவரும் துரோகிகள். அதிமுக சரியான பாதையில் பயணிக்கிறது. மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுக்கும் கட்சியாக அதிமுக தொடர்ந்து இருக்கும். நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை மாவட்ட செயலாளர்கள் உடனே தொடங்க வேண்டும். கூட்டணி பேச்சுவார்த்தையை தலைமை பார்த்துக் கொள்ளும். அதிமுக தலைமையில் மெகா கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளோம். அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் உறுதியாக இருந்தால் எதிரிகளை வீழ்த்துவது எளிது. வாக்குச்சாவடி அளவில் கட்சியை பலபடுத்த வேண்டும். திமுக குற்றச்சாட்டுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்காமல் மக்கள் பணியில் மாவட்ட செயலாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். சட்டப்போராட்டங்களை குறித்து கவலை கொள்ளாமல் கட்சி பணிகளில் கவனம் செலுத்துங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், பா.ஜ., உடன் கூட்டணி அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ‛பாஜ.,வுடன் கூட்டணி அமைத்தால் சிறுபான்மையினர் ஓட்டளிக்க மாட்டார்கள். பா.ஜ., உடன் கூட்டணி அமைத்தால் அதிமுக.,விற்கே இழப்பு அதிகம். எனவே பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டாம்.’ என சிவி சண்முகம் எதிர்ப்பு தெரிவித்தாக தகவல் வெளியானது. அவரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ., கூட்டணிக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேநேரத்தில் கொங்கு மண்டல நிர்வாகிகள் சிலர் பா.ஜ.,வுடனான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னர் பேசிய பழனிசாமி, ‛‛அதிமுக.,வை பா.ஜ., கட்டுப்படுத்தவில்லை. 100 சதவீதம் இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும் என எப்போதும் வற்புறுத்தியது இல்லை. அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜ., தலையிடுவதில்லை. எனவே பா.ஜ., குறித்து யாரும் அவதூறாக பேச வேண்டாம்” நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார்.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சசிகலா, பன்னீர் செல்வம், தினகரன் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. உட்கட்சியில் எந்த பிரச்சனையும் இல்லை. பிரச்சனை இல்லாத ஒரு விஷயம் குறித்து நாங்கள் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. பார்லி., தேர்தல் குறித்த பணிகள் பற்றி ஆலோசனை நடத்தினோம். திமுக அரசு மீது மக்கள் கடும் கோபம். எங்கள் நோக்கம் 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டும் தான். அதிமுகவில் எந்த பிரச்சனையும் இல்லை; அனைவரும் ஒற்றுமையாகவே உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.