திமுகவினர் கொள்ளையடிக்கவே கட்சி நடத்துகிறார்கள்: ஜேபி நட்டா

நாடு பாதுகாப்பான கைகளில் உள்ளதாகவும் தமிழகம் பாதுகாப்பான கைகளில் இல்லை எனவும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கூறியுள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பாஜக சார்பில் கோவை நீலகிரி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா,மத்திய அமைச்சர் எல்.முருகன், மாநிலத் தலைவர் அண்ணாமலை,பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஜெ.பி.நட்டா பேசியதாவது:-

தமிழகம் பழமையான மொழி, கலாச்சாரம் கொண்ட ஆன்மீக பூமி. இப்பகுதி இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. தற்போது கூடியுள்ள கூட்டம் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தும். மோடி தலைமையிலான இந்தியா முன்னேறி வருகிறது. கொரோனா, உக்ரைன் போர் ஆகியவற்றுக்கு பிறகு உலக நாடுகளின் பொருளாதார நிலை மோசமடைந்துள்ள சூழலில் இந்தியாவின் பொருளாதாரம் முன்னேற்றமடைந்து வருகிறது. ஏற்றுமதியில் உலகில் இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளுக்கு ஆட்சியிலும் கட்சியிலும் அதிகாரம் வழங்கப்பட்டு வருகிறது.80 கோடி மக்கள் பயனளிக்கும் உணவு, தானியங்கள் திட்டம்‌ மூலம் ஏழை மக்கள் பசியாறி கொண்டிருக்கிறார்கள். பிரதமர் மோடி அரசு 11 கோடி மக்களுக்கு 5 இலட்ச ரூபாய் மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு பட்டியலினம் மற்றும் பழங்குடி சமுகத்தை சேர்ந்தவர்களை குடியரசு தலைவராக்கியுள்ளோம். பட்டியலினம் மற்றும் பழங்குடியை சேர்ந்த பலர் மத்திய அமைச்சராக்கப்பட்டுள்ளனர். பெண்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் இளைஞர்கள் வளர்ச்சிக்காக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

தமிழகம் அதிகளவிலான மருத்துவ கல்லூரிகளை பெற்றுள்ளது. விவசாயிகள் வங்கி கணக்கில் 4 மாதத்திற்கு ஒருமுறை 2 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு பயிர் பாதுகாப்பு திட்டம் மூலம் இழப்பீடு வழங்கப்பட்டு வருவதுடன் ஒரு இலட்சம் கோடி ரூபாயை விவசாய துறைக்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. நாடு முழுவதும் 220 கோடி கொரோனா தடுப்பூசி மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. 9 மாதத்தில் 2 தடுப்பூசிகளை இந்தியா உருவாக்கி 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததுடன் 44 நாடுகளுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கியுள்ளோம்‌.

பிரதமர் மோடி முயற்சியால் உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட 32 ஆயிரம் இந்திய மாணவர்கள் பத்திரமாக நாடு திரும்பினர். 11 மருத்துவக் கல்லூரிகள் மூலம் தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பு வலுவடைந்துள்ளது. நாடு பாதுகாப்பானவர் கைகளில் உள்ளது ஆனால் மாநிலம் பாதுகாப்பான கைகளில் இல்லை. திமுக ஒரு குடும்ப கட்சி. திமுக என்பதற்கு வாரிசு அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து என்பது தான் விளக்கம். திமுக மக்களுக்காக ஆட்சி செய்யவில்லை. நமக்கு நாடு தான் முக்கியம். ஆனால் திமுகவினர் கொள்ளையடிக்கவே கட்சி நடத்துகிறார்கள். குடும்பத்திற்காக ஆட்சி நடத்துகிறார்கள்.

பாஜகவிற்கு முதலில் நாடு, பிறகு கட்சி அதன்பிறகு தான் தனி மனிதன். ஆனால் திமுகவில் சுயநலன் தான் முதலில் இருக்கும். பிறகு கட்சி, கடைசியாக நாடு என இருக்கிறது. ராகுல்காந்தி பாரத் ஜோடா யாத்திரை என நாட்டை பிளவுப்படுத்துவர்களுடன் நடந்து கொண்டிருக்கிறது. நாம் ஒருமைப்பாட்டை வலியுறுத்துகிறோம். ஆனால் அவர்கள் பிரிவினையை தூண்டுகிறார்கள். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை பிரதமர் மோடி இரத்து செய்து ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் முழுமையாக இணைத்துள்ளார். அதே வேளையில் திமுக., கருணாநிதி அன்ட் சன்ஸ்க்கான கட்சி. காங்கிரஸ் காந்தி அன்ட் சன்ஸ்க்கான கட்சி. அடுத்த முறை நான் இப்பகுதிக்கு வரும் போது நீலகிரியில் தாமரை மலர்ந்திருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அண்ணாமலை திமுகவை கடுமையாக சாடியதுடன் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் விட்டுவைக்க வில்லை. உதயநிதி ஸ்டாலினை பட்டத்து இளவரசர் என்று விமர்சித்த அண்ணாமலை 2 நாட்களுக்கு முன்னர் உதயநிதி கோவை வந்த போது போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிப்பட்டதாக கூறினார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை தமிழக மக்களை ஏமாற்றுவதில் அவர் தான் நம்பர் 1 என்று விமர்சித்த அண்ணாமலை, கம்யூனிஸ்ட் கட்சிகளையும் தாக்கினார். வேண்டாம் வேண்டாம் என்று கூறும் ஒரே கட்சி கம்யூனிஸ்ட் கட்சி தான் என்றும் ஊரை வளர்ச்சி அடையவிடமாட்டார்கள் எனவும் விமர்சித்தார்.

ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு என முதல்வர் பேசுவதாகவும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.5,000 கொடுக்கச் சொன்ன ஸ்டாலின், இப்போது ஏன் அதை வழங்கவில்லை என அண்ணாமலை வினவினார். மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு ஏன் வழங்கவில்லை என வினவிய அண்ணாமலை, அரசை நம்பி கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறினார். ஜே.பி.நட்டா தமிழகத்தில் நாடாளுமன்ற பிரச்சாரத்தை தொடங்கியிருப்பதாகவும் நிச்சயம் வெற்றி பெறுவோம் எனவும் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.