விளைநிலத்தை அழித்துவிட்டு தனியாக பட்ஜெட் போட்டு என்ன பயன்?: சீமான்

விளைந்து அறுவடைக்கு தயாரக இருக்கும் பயிர் மீது மண்ணைக் கொட்டி பாதையை போடுபவர்கள் வேளாண் துறைக்கு தனியாக பட்ஜெட் போடுவதில் என்ன பயன் வரப்போகிறது என்று சீமான் பேசினார்.

திருவையாறு புறவழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசியல் வலிமை, அதிகார வலிமை அற்ற எளிய மக்கள் என்பதால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்ற திமிரில் செய்ததுதான் இது. இதை எப்படி சகித்துக்கொள்ள முடியும். விளைநிலத்தை மூடிவிட்டு நீங்கள் சாலை போட முடியும். ஆனால், ரோட்டை அழித்து விட்டு மறுபடியும் அதை விளைநிலமாக மாற்ற முடியுமா? வேளாண் குடிமக்களை விடுங்க.. கற்றறிந்தவர்கள் சொல்லுங்க.. எப்படி உருவாக்க முடியும். வயலில் இறங்கி வேலை செய்ய ஆள் இருக்கா? ஒருவேளை நாங்கள் வருகிறோம். இந்த சாலையை பெயர்த்து எடுத்துவிட்டு விளைநிலமாக மாற்றி கொடுக்க முடியுமா என் மக்களுக்கு. ஆனால் உறுதியாக ஒருநாள் செய்வோம். எனக்கு அப்படி எல்லாம் சாலை ஒன்றும் தேவை இல்லை.

பட்ஜெட் போட்டு இரண்டு வருஷம் ஆகிவிட்டது எதாவது மாறுதல் வந்துள்ளதா? விளைநிலைத்தில் இறங்கி வேலை செய்ய ஆள் இருக்கிறதா? 100 வேலை திட்டத்தால் என் மக்களை உழைப்பு மூலம் வெளியேற்றி விட்டார்கள். வட இந்தியாவில் இருந்து வந்து தஞ்சாவூரில் நாற்று நட்டுக் கொண்டிருக்கிறான். இது எவ்வளவு பெரிய ஆபத்தான போக்கு என்பது உங்கள் அறிவுக்கு எட்டவில்லையா? அவன் நிலத்தையும் அரசியலையும் அதிகாரத்தையும் ஆக்கிரமிப்பான் என்று உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? உழைப்பில் இருந்து என் மக்களை வெளியேற்றிவிட்டு பட்ஜெட் போட்டால் பயிர் விளையுமா? நிலத்தில் பயிர்களை விளைவிக்க ஆள் வேண்டுமா? இல்லையா? அப்போ.. இது ஒரு ஏமாற்று ஒரு வெற்று திட்டம் என்பது தெரிகிறது.

இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்த திமுக அரசு இதுவரை வேளாணுக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யவில்லையே.. அதிகாரத்திற்கு வரவில்லையென்றாலும் ராமதாஸ் வேளாணுக்கென தனியாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்தார். அதற்கு பிறகு பட்ஜெட் எப்படி வர வேண்டும் என்று சொன்னது நாங்கள். ஆனால் நீங்கள் இத்தனை காலம் ஆட்சி செய்து புதிதாக நேற்று தான் ஆட்சிக்கு வந்தது போல தனியாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்கிறீர்கள். விளைந்து அறுவடைக்கு தயாராகும் இருக்கும் நிலத்தில் மண்ணைக் கொட்டி பாதை போடும் நீங்கள் தனியாக பட்ஜெட் போட்டு என்ன பயன் வரப்போகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என விருத்தாசலத்தில் நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். கடலூர் விருத்தாசலம், மாற்றுக்கட்சியினர் இணையும் நிகழ்ச்சி விருத்தாசலத்தில் நாம் தமிழர் கட்சியில் மாற்றுக்கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு மாற்று கட்சியினரை வரவேற்று கட்சியில் புதிதாக இணைந்து கொண்டவர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். அப்போது 300 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதையடுத்து சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

என்.எல்.சி. நிர்வாகத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை கொடுக்கவில்லை. மாற்று இடம் கொடுக்கவில்லை. வட மாநிலத்தவர்களுக்கு மட்டும் வேலை கொடுக்கப்படுகிறது. தமிழக அரசு மக்களுக்கான அரசாக இருந்து போராடி மக்களுக்கான உரிமையை பெற்றுத்தர வேண்டும். இனிமேல் நிலத்தை கையகப்படுத்தினால் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். கடுமையாக எதிர்ப்போம், போராடுவோம். தமிழர்களுக்கு 90 சதவீத வேலைவாய்ப்பு கேட்டோம். ஆனால் 80 சதவீத வேலைவாய்ப்பையாவது தரவேண்டும். ரெயில்வே, என்.எல்.சி. ஆகியவை தமிழகத்தில் இருக்கும்போது தமிழர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கிறோம். விவசாயிகளிடம் இருந்து கரும்பை வாங்கி பொங்கல் பண்டிகைக்கு கொடுப்பார்கள் என நம்பி தான் 40 ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிரிட்டார்கள். திடீரென பண்டிகைக்கு கரும்பு இல்லை என்று கூறும்போது, இதை நம்பி பயிர் செய்த விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். கரும்பை கொள்முதல் செய்து மக்களுக்கு கொடுக்க வேண்டும். பனை பயனில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. வேப்பூரில் மட்டும் பனை மரங்கள் வெட்டப்படவில்லை. நாடு முழுவதுமே பனை மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. அரசு உடனடியாக தலையிட்டு பனை மரங்கள் வெட்டி கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் செயல்பாடு மிக கொடுமையாக இருக்கிறது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து தான் போட்டியிடுவோம். 20 பெண்களுக்கும், 20 ஆண்களுக்கும் வாய்ப்பு கொடுப்போம். யாருடனும் கூட்டணி கிடையாது. இது என் நாடு, என் தேசம். இது என் மொழி என்று யார் என்னுடன் வந்து என் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.