அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க கோரி எடப்பாடி ஆர்ப்பாட்டம்!

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வலியுறுத்தியும் திமுக அரசை கண்டித்து திருவண்ணாமலையில் ஜனவரி 2ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது என அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

தமிழர் திருநாளான பொங்கலுக்கு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் ரேஷன் கடைகள் வாயிலாக பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வந்தது. அதிமுக ஆட்சியில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்பட்டது. இந்நிலையில் தான் பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்து அதிமுக சார்பில் வரும் ஜனவரி 2ம் தேதி திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது:-

அதிமுக ஆட்சியில் ஆண்டுதோறும் தை பொங்கலை முன்னிட்டு ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் சர்க்கரை, அரிசி, செங்கரும்பு, ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த விடியா ஆட்சியில் பல்வேறு துன்பங்களையும், துயரங்களையும் சந்தித்து வரும் இவ்வேளையில், 2023ம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட இருக்கும் பரிசு தொகுப்பில் செங்கரும்பை வழங்காமல் மக்களை ஏமாற்றியதோடு, அரசின் சார்பில் செங்கரும்பை கொள்முதல் செய்வார்கள் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் செங்கரும்பை விளைவித்துள்ள நிலையில், தற்போதைய அரசின் அறிவிப்பால் விவசாய பெருங்குடி மக்கள் மிகுந்த அதிர்ச்சியம், வேதனையும் அடைந்துள்ளனர்.

பொதுமக்களும், விவசாய பெருமக்களும் மிகுந்த வேதனை அடைந்துள்ள இச்சூழ்நிலையில் அரசின் சார்பில் வழங்க இருக்கும் பொங்கல் தொகுப்பு குறித்து விடியா திமுக அரசின் அமைச்சர் எவ வேலு செய்தியாளர்களிடம் பேசியபோது வெல்லம், கரும்பு, முந்திரி போன்ற பொருட்களை வழங்கியபோது அதன் தரம் குறித்து புகார்கள் வந்ததால், இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் இதுபோன்ற பொருட்கள் வழங்கப்படவில்லை என பொறுப்பற்ற முறையில் பேசி இருக்கிறார். இதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பை வழங்காமல் மக்களை ஏமாற்றியதோடு, செங்கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாதரத்தை சிதைத்துள்ள விடியா திமுக அரசை கண்டித்தும், திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது பொங்கல் பரிசாக மக்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என கேட்டு கொண்டபடி, தற்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வலியுறுத்தியும், விவசாயிகளிடம் இருந்து செங்கரும்பை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க வலியுறுத்தியும் அதிமுக விவசாய பிரிவின் சார்பில் 2023 ஜனவரி 2ம் தேதி காலை 10 மணியளவில் திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதற்கு கழக துணை பொதுச்செயலாள கேபி முனுசாமி, கழக அமைப்பு செயலாளர் பி தங்கமணி தலைமை வகிப்பார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.