பொன்னியின் செல்வன் 2-வது பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகிறது!

பொன்னியின் செல்வன் 2-வது பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கல்கி எழுதிய சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ஐ பலரும் திரைப்படமாக எடுக்க முயன்று முடியாமல் போய் கைவிட்டார்கள். ஆனால், அதை இரண்டு பாகங்களாக எடுத்து முதல் பாகத்தை கடந்த செப்., 30ல் வெளியிட்டு இயக்குனர் மணிரத்னம் சாதனை படைத்தார். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், லால், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் நடித்த இந்த படம் உலகம் முழுக்க ரூ.500 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. இரண்டாம் பாக படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்றாலும் பேட்ச் ஒர்க் மற்றும் இன்னும் சில காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடக்கிறது.

இந்நிலையில் இரண்டாம் பாகம் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி பொன்னியின் செல்வன் 2, 2023, ஏப்ரல் 28ல் திரைக்கு வருவதாக அறிவித்து, அது தொடர்பான புரொமோ வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். கோடை விடுமுறையை ஒட்டி ‛பொன்னியின் செல்வன் 2’ ரிலீஸ் ஆக உள்ளது. இதனால் படத்தின் வசூல் சிறப்பாக இருக்கும் என்றும் முதல்பாகத்தை விட கூடுதல் வசூல் வேட்டையை நிகழ்த்த உள்ளது குறிப்பிடத்தக்கது.