புதுச்சேரியில் தண்டவாளத்தில் குண்டு வெடித்தது!

புதுச்சேரியில் தண்டவாளத்தில் நேற்று இரவு குண்டு வெடித்தது. வெடிக்காத நிலையில் மற்றொரு குண்டு கண்டெடுக்கப்பட்டது. ரெயிலை கவிழ்க்க சதியா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

புதுவையில் ரவுடிகளுக்குள்ளான மோதலின்போது சர்வ சாதாரணமாக நாட்டு வெடிகுண்டுகளை வீசி பழிதீர்க்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. சமீபத்தில் நடந்த பெரும்பாலான கொலைகள் இதுபோல் நடந்து இருப்பதே சாட்சிகளாக உள்ளன. இந்தநிலையில் புதுச்சேரி காராமணிக்குப்பம் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று இரவு 9.30 மணியளவில் நாட்டு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அந்த பகுதி மக்கள் உடனடியாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு ரெயில்வே தண்டவாளத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறிய துகள்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கு மற்றொரு நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதுபற்றி தகவல் தெரிவித்து சம்பவ இடத்துக்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த வெடிகுண்டை பாதுகாப்பாக மீட்டு மணல், மரத்தூள் நிரப்பிய பிளாஸ்டிக் வாளியில் வைத்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து அங்கு வேறு ஏதாவது நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா? என தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்தநிலையில் அந்த இடத்தில் இரவு 10 மணியளவில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு விரைவு ரெயில் வந்தது. இதனால் போலீசார் தேடும் பணியை நிறுத்தினர். அந்த ரெயில் சம்பவ இடத்தை கடந்து சென்ற பிறகு மீண்டும் தேடுதல் வேட்டையை தொடங்கினர். அப்போது அந்த இடத்தில் வேறு எந்த நாட்டு வெடிகுண்டும் சிக்கவில்லை.

சென்னை- புதுச்சேரி ரெயில் வருவதற்கு சற்று நேரத்துக்கு முன்பு தான் காராமணிக்குப்பம் ரெயில்வே தண்டவாளத்தில் குண்டு வெடித்துள்ளது. வெடிக்காத மற்றொரு குண்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. அப்படியானால் இந்த ரெயிலை குறி வைத்து அங்கு தண்டவாளத்தில் குண்டு பதுக்கி வைக்கப்பட்டதா? அல்லது தண்டவாளத்தை தகர்க்கும் நோக்கத்தில் குண்டு வைக்கப்பட்டதா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.