ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் பனை, முருங்கை மரம் நட கோரி வழக்கு!

நூறு நாள் வேலை திட்டமான மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் பனை மரங்களையும், முருங்கை மரங்களையும் நட உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்துக்காக, அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் 2006 ஆம் ஆண்டு மத்திய அரசு, ஆண்டுக்கு நூறு நாள் வேலை வழங்கும் திட்டமான, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை கொண்டு வந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் புதிய குளங்கள் வெட்டுவது, குளம், குட்டை, ஊரணிகளை தூர்வாருவது, கரைகளை பலப்படுத்துவது, சாலை அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுவதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

கிராம மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக, நூறு நாள் வேலை திட்டத்தின்கீழ் முருங்கை மரங்களையும், பனை மரங்களையும் தமிழகத்தில் நட உத்தரவிட வேண்டும். மேலும், பல மருத்துவ குணங்களை கொண்ட முருங்கை மற்றும் பல பொருட்கள் உற்பத்தி செய்ய பயன்படும் பனை மரங்களை நடக் கோரி 2021 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி மத்திய – மாநில அரசுகளுக்கு அளித்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்’ என்று அய்யா தமது மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வர உள்ளது