5 மலைச் சிகரங்களில் ஏறி பெண் சாதனை!

மஹாராஷ்டிராவை சேர்ந்த பிரியங்கா மோஹிதே, 8,000 மீட்டருக்கு மேல் உயரமான ஐந்து மலைச் சிகரங்களில் ஏறிய முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

மஹாராஷ்டிராவில், சதாரா மாவட்டத்தை சேர்ந்த பிரியங்கா மோஹிதே, (30), மலையேற்றத்தில் பல சாதனைகளை படைத்து வருகிறார். 2013ல், எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் ஏறி சாதனைப் படைத்தார். இதன் உயரம், 8,849 மீட்டர் ஆகும். 2018ல், 8,516 மீட்டர் உயரமான லோட்சே மலைச் சிகரத்திலும், 8,485 மீட்டர் உயரமான மகாலு மலைச் சிகரத்திலும்; கடந்த ஆண்டு, 8,091 மீட்டர் உயரமான அன்னபூர்ணா மலைச் சிகரத்திலும் ஏறினார்.

தற்போது, உலகின் மூன்றாவது மிகப்பெரிய மலையான கஞ்சன்ஜங்கா மலைச் சிகரத்தில் ஏறி அசத்தி உள்ளார். இதன் வாயிலாக, 8,000 மீட்டருக்கு மேல் உயரமான ஐந்து மலைச் சிகரங்களில் ஏறிய முதல் இந்திய பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.