சென்னை விமான நிலையத்துக்கு காமராசர், அண்ணா பெயர்களை மீண்டும் சூட்டுக: ராமதாஸ்

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசரின் பெயரும், பன்னாட்டு முனையத்திற்கு அண்ணாவின் பெயரும் மீண்டும் சூட்டப்படுவதை விமான நிலையங்கள் ஆணையம் விழா நடத்தி அறிவிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னை விமான நிலையத்தின் விரிவாக்க மற்றும் நவீனமயமாக்கல் பணிகளுக்கும், தலைவர்களின் பெயருக்கும் எந்த தொடர்பும் இல்லை. சென்னை விமான நிலையப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை என்பது உண்மை தான். ஆனால், அனைத்துப் பணிகளும் முடிவடைந்த பிறகு தான் தலைவர்களின் பெயரை மீண்டும் சூட்ட வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. விமான நிலையங்கள் ஆணையம் நினைத்தால் சென்னை விமான நிலையத்தின் நுழைவாயிலில் காமராசர் உள்நாட்டு முனையம், அண்ணா பன்னாட்டு முனையம் என்று பெயர் பலகை அமைக்க முடியும். அதேபோல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையக் கட்டிடங்கள் மீதும் இத்தகைய பெயர் பலகைகளை பொறுத்த முடியும். அது தான் முறையாகும்.

சென்னை விமான நிலையங்களின் முனையங்களுக்கு காமராசர், அண்ணா ஆகியோரின் பெயர்களை சூட்டுவது விமான நிலையத்தின் அடையாளத்துடன் சம்பந்தப்பட்டது ஆகும். கட்டுமானப் பணிகளை காரணம் காட்டி, 10 ஆண்டுகளுக்கும் மேலாக முனையங்களின் பெயர்களை அழித்து விட்டு விமான நிலையத்தை இயக்குவது எந்த வகையிலும் முறையல்ல. எனவே, சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசரின் பெயரும், பன்னாட்டு முனையத்திற்கு அண்ணாவின் பெயரும் மீண்டும் சூட்டப்படுவதை விமான நிலையங்கள் ஆணையம் விழா நடத்தி அறிவிக்க வேண்டும்.

விமான நிலைய வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் காமராசர், அண்ணா ஆகியோரின் பெயர் பொறித்த பெயர் பலகைகள் அமைக்கப்பட வேண்டும். விமான பயணச் சீட்டுகளிலும் காமராசர் உள்நாட்டு விமான நிலையம், அண்ணா பன்னாட்டு விமான நிலையம் என்று பெயர்கள் அச்சிடப்பட வேண்டும். இவை அனைத்தும் உடனே நடைமுறைக்கு வருவதை விமான நிலையங்கள் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.