வாட்ஸ் அப் தகவலை எல்லாம் சபையில் பேசக்கூடாது: முதல்வர் ஸ்டாலின்

வாட்ச் அப் தகவலை வைத்து கொண்டு சட்டப்பேரவையில் வந்து பேசக் கூடாது என்று இபிஎஸ்ஸுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவரான எடப்படி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அப்போது முதல்வர் ஸ்டாலினுக்கும், இபிஎஸ்ஸுக்கு இடையே நடைபெற்ற காரசார விவாதம்:

எடப்பாடி பழனிச்சாமி: தமிழ்நாட்டில் கூட்டு பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: பொள்ளாச்சி பாலியல் சம்பவமே உங்கள் ஆட்சியில்தான் நடைபெற்றது.

எடப்பாடி பழனிச்சாமி: பொள்ளாச்சி சம்பவம் எல்லாம் முடிந்துவிட்டது. பொள்ளாச்சி ஜெயராமனை மக்களே வெற்றி பெற வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் கஞ்சா அமோகமாக பயன்படுத்தப்படுகிறது.

முதலமைச்சர்: கஞ்சா வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றம் புரிந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உங்கள் ஆட்சியைவிட அதிக அளவில் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளோம். காவல் துறையினர், அமைச்சர் மீது சிபிஐ விசாரணை முடிவடையும் தருவாயில் உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி: போதைப்பொருள் எங்கள் ஆட்சியில் வந்தததை போன்று சொல்கிறீர்கள். போதைப்பொருள் தடுப்பு சட்டம் அப்போதிருந்தே உள்ளது. நான் நடப்பவற்றைதான் நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

முதமைச்சர்: நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லுங்கள்; நாங்கள் கேட்கிறோம்; ஆனால் ஆதாரத்தோடு சொல்லுங்கள். வாட்சப் தகவல்களை இங்கே சொல்லாதீர்கள்.

இவ்வாறு முதலமைச்சருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையே நேரிடையாக காரசார விவாதம் நடைபெற்றது.