கலைஞர் சிலை அமைக்கும் விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

திருவண்ணாமலையில் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி சிலை வைக்கும் இடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலையை சேர்ந்த ஜி. கார்த்திக் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், வேங்கைக்கால் பகுதியில் 1992ஆம் ஆண்டு ராஜேந்திரன் என்பவரால் 92.5 அடி நிலம் விற்கப்பட்ட நிலையில், அருகில் உள்ள 215 சதுர அடி பொது இடத்தை ஆக்கிரமித்து, அங்கு மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி சிலை வைக்க மாவட்ட திமுகவினர் நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

திருவண்ணாமலைக்கு பல்வேறு மாநிலங்கள் நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துபோகும் இடத்தில், கிரிவல பாதையையும், மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் இடத்தில் சிலையை நிறுவுவதற்காக பில்லர்கள் அமைக்கப்பட்டு, அவசர அவசரமாக பணிகள் நடைபெற்றுவருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பக்தர்கள் பாதிக்க கூடும் எனவும், கால்வாய் அமைந்துள்ள பகுதி என்றும், அங்கு கட்டுமானங்கள் மேற்கொள்ளும் பட்சத்தில் பருவமழை காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படும் என்பதால் வழக்கு முடியும் வரை தற்போதுள்ள நிலை தொடர வேண்டுமெனவும் வாதிடப்பட்டது.

எ.வ.வேலு தரப்பில் ராஜேந்திரன் என்பவரிடமிருந்து வாங்கிய நிலத்திற்கு பட்டா உள்ளது என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பிறரின் தூண்டுதலின் பேரில் தொடரபட்ட வழக்கு என்பதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

அரசு தரப்பில், இது தனியார் சொத்து என்றும், அதில் சிலை நிறுவப்படுவதை எதிர்த்து வழக்கு தொடர மனுதாரருக்கு எந்த முகாந்திரமும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்தும், வருவாய் துறை ஆவணங்களை ஆய்வு செய்தும் நாளை அறிக்கை தாக்கல் செய்ய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர். அதுவரை சிலை அமைக்கும் விவகாரத்தில் தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.