அண்ணாமலை அரசியல் செய்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் செய்கிறார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் துார் வாரும் பணிகளை இரண்டு நாட்களாக நேரில் பார்வையிட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். பின்னர் திருச்சி விமான நிலையம் வந்தடைந்த அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தேர்தல் நேரத்தில் 7 வாக்குறுதிகளை திருச்சியில் அறிவித்தோம். கடந்த ஒரு வருடத்தில் நம் தமிழக அரசு எடுத்துள்ள திட்டங்கள் திமுகவின் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் உள்ளன. கடந்த ஆண்டு 62 கோடி ரூபாய் செலவில் 4161 கி.மீ நீளத்திற்கு 641 சாலைப் பணிகளை நிறைவேற்றி உள்ளோம். டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக 3.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும். கடந்த ஆண்டு 4.90 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி நடைபெற்றது. சம்பாவில் 13.34 லட்சம் ஏக்கர் சாகுபடி நடைபெற்றது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.

இந்த ஆண்டு பருவமழைக்கு முன்பு டெல்டா மாவட்டங்களில் 80 கோடி மதிப்பீட்டில் 4,964 கிமீ நீளத்திற்கு, 683 இடங்களில் துார்வாரும் பணிகள் நடைபெற்றுள்ளன. சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக மேட்டூர் அணையானது மே 24 இல் திறக்கப்பட்டது. இதனால் டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டைவிட குறுவையில் 2.5 லட்சம் ஏக்கரும், சம்பாவில் 13.5 லட்சம் ஏக்கரும் சாகுபடி பரப்பு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் முழுமையடைந்துள்ளன. உழவர்களுக்கு 61 கோடி ரூபாய் மதிப்பிலான தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

அந்தவகையில் ”மகசூல் பெருக்கம் மகிழும் விவசாயி” என்ற வாக்குறுதி எப்படி நிறைவேறுகிறது? என்பதை பார்ப்பதற்காகத்தான் டெல்டா பகுதியில் மின்னல் வேக சுற்றுப்பயணத்தை நடத்தி முடித்து வந்திருக்கிறேன். கடந்த ஆண்டே மகசூல் பெருகிவிட்டது. அதில் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்பது உங்களுக்கு தெரியும். நெல் உற்பத்தியில் கடந்த ஆண்டு சாதனையானது இந்த ஆண்டும் தொடரப்போகிறது. அதைவிட கூடுதல் பயன் அடையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. முன்கூட்டியே திறந்துவிடப்பட்டுள்ள காவிரி நீரை முறையாக பயன்படுத்தியும், தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தக்கூடிய பல்வேறு விவசாயிகள் நலத்திட்டங்களை பயன்படுத்தியும் நெல் உற்பத்தியில் புதிய சாதனையை டெல்டா விவசாயிகள் இந்த ஆண்டும் படைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சீர்க்கெட்டு இருப்பதாக தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டுகிறார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ‘நானும் இருக்கிறேன் என்பதற்காக எதையாவது எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஜாதி சண்டைகள், கலவரங்கள், கூட்டு வன்முறைகள் நடைபெறவில்லை. சட்டம் -ஒழுங்கு சரியாக இருக்கிற காரணத்தினால் தான் முதலீடுகள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது. அண்ணாமலை அரசியல் செய்கிறார்; நாங்கள் மக்களுக்கு நல்லது செய்கிறோம். ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு பண பலன்கள் மற்றும் ஓய்வுபெறும் வயதை குறைப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா ஆகியோர் அப்போது உடன் இருந்தனர். செய்தியாளர்கள் சந்திப்பு முடித்த பிறகு, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு ஆகியோர் தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றனர்.