திருச்சி மத்திய சிறையில் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்யுங்கள்: அன்புமணி

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் வாடும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்யுங்கள் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி 13-ஆவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு முகாம் அகதிகள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை, எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. விடுதலை செய்தால் தாய்நாட்டுக்குச் சென்று சொந்தங்களுடன் வாழவே அவர்கள் விரும்புகின்றனர். அவர்களை காரணமே இல்லாமல் சிறப்பு முகாம்களில் அடைத்து வைப்பது மனித உரிமை மீறல் ஆகும்.

சிறப்பு முகாம் என்பது முகாம் அல்ல, அது சிறையை விட கொடுமையானது. மனிதர்கள் வாழத்தகுதியற்ற இடம் ஆகும். கடந்த காலங்களில் பல முறை அவர்கள் போராடிய போது விரைவில் விடுதலை செய்வதாக வாக்குறுதி அளித்த தமிழக அரசு இன்று வரை விடுதலை செய்யவில்லை.

தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் நலனுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார். சிறப்பு முகாம் அகதிகளும் ஈழத்தமிழர்கள் தான். காலவரையின்றி அவர்களை அடைத்து வைப்பது நியாயமல்ல. அவர்களை உடனடியாக விடுதலை செய்ய முதல்-அமைச்சர் ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் பாமக தலைவராக பொறுப்பேற்ற அன்புமணி ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார். சந்திப்பிற்கு பிறகு அன்புமணி செய்தியாளர்களிமட் கூறுகையில், “விஜயகாந்த் தமிழக அரசியலில் தைரியமாக மக்களை திரட்டி அரசியல் நடத்தி வருகிறார். அவர் மீது எனக்கு எப்போதும் தனிப்பட்ட மரியாதை இருக்கிறது. இது நட்பு ரீதியான சந்திப்பு. தமிழக அரசியலில் இன்றைய சூழல்கள் நிச்சயமாக மாறும். அதற்கு ஏற்ற வகையில் எங்களின் அரசியல் இருக்கும்” என்றார்.