இந்தியா, இஸ்ரேல் அமைச்சர்கள் ஆலோசனை!

இந்தியா வந்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் பெஞ்சமின் கன்ட்சுக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியா- இஸ்ரேல் இடையிலான தூதரக உறவுகள் 30 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில், தொலைநோக்கு திட்டத்தை ஏற்று கொண்டுள்ளதாக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

இந்தியா வந்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் பெஞ்சமின் கன்ட்சுக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, தேசிய போர் நினைவு சின்னத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து சர்வதேச மற்றும் பிராந்திய உறவுகள், தற்போதைய சூழ்நிலை குறித்து விவாதித்தனர். இது தொடர்பாக ராஜ்நாத் சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

டில்லியில் பெஞ்சமின் கன்ட்சுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இஸ்ரேலுடனான ஒத்துழைப்பு குறித்து முக்கிய மதிப்பு அளிக்கப்படுகிறது. எதிர்காலத்தில், இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுக்கு வழிவகுக்கும் கொள்கையை ஏற்று கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இரு தரப்பு பிராந்திய மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே ஒரு மித்த கருத்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.