கோகுல்ராஜ் கொலை வழக்கு; தண்டனையை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் 10 பேரின் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது என நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி யுவராஜ் உட்பட 10 பேர் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஜூலை 6ஆம் தேதிக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது. மேலும் குற்றவாளிகள் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஜாமின் வழங்கவும் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேருக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜாமீன் வழங்குவது பற்றி முடிவெடுக்க இயலாது என நீதிபதிகள் கூறியுள்ளனர். இதனால் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரியும், ஜாமீன் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட யுவராஜ் உள்பட 10 பேரும் தங்களது மனுக்களை திரும்ப பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி 10 பேரும் வழக்கு தொடுத்திருந்தனர். கொலை குற்றவாளிகளுக்கு ஜாமீன் தர வேண்டாம், தண்டனையையும் ரத்து செய்ய வேண்டாம் எனவும் கோல்குல்ராஜ் தாயார் வலியுறுத்தியிருந்தார். எனவே, 10 பேரின் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது என நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், வழக்கு தொடர்பான ஆவணங்களை கீழமை நீதிமன்றத்தில் இருந்து பெற நீதித்துறை பதிவாளருக்கு ஆணையிட்டுள்ளது. தண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது. கீழமை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்ககோரிய வழக்கின் இறுதி விசாரணை ஜூலை 6க்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.