தி.மு.க., அரசின் தவறுகளை சுட்டிக் காட்டுவோம்: கே.எஸ்.அழகிரி

தி.மு.க., அரசின் தவறுகளை சுட்டிக் காட்டுவோம் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

தமிழக காங்கிரஸ் சார்பில், உதய்பூர் சிந்தனை அமர்வு மாநாட்டின், கொள்கை பிரகடன பயிற்சி முகாம், மாமல்லபுரம் சொகுசு விடுதியில், நேற்று துவங்கியது. இரண்டு நாள் முகாமை, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் முன்னிலையில், கே.எஸ்.அழகிரி துவக்கி வைத்தார்.பின், கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

தமிழகத்தில் எங்கள் கூட்டணிக் கட்சியான தி.மு.க., ஆட்சியில் இருக்கிறது. ஆட்சிக்கு எதிராக, அ.தி.மு.க., – பா.ஜ., பேசுகிற காரணத்தால், அவை தான் எதிர்க்கட்சி பணியை செய்வதாக, ஒரு மாய தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றன; அது உண்மையல்ல. நாங்களும் ஆட்சியில் நடக்கும் தவறுகளை சுட்டிக் காட்டுவோம். ஆட்சி எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதை விளக்கி சொல்கிற நல்ல நண்பர்களாக இருப்போம். ஆட்சியால் ஏற்படும் சங்கடங்களையும் சொல்வோம். ஆட்சியாளர்கள் செய்யும் அனைத்தையும் எதிர்க்க வேண்டும் என்ற நோக்கம், அ.தி.மு.க., – பா.ஜ.,வுக்கு உள்ளது. தவறான கொள்கையை, அக்கட்சிகள் கடைப்பிடிக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.