வங்கி மோசடி வழக்கில் தொழிலதிபரின் விமானம் பறிமுதல்!

வங்கி மோசடி வழக்கில், தொழிலதிபரின் 31 கோடி ரூபாய் மதிப்புள்ள விமானத்தை அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது.

டெல்லியை சேர்ந்த ‘பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் லிமிடெட்’ நிறுவன அதிபர் சஞ்சய் சிங்கால், 33 வங்கிகளில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து கடன் வாங்கி அதை திருப்பிச் செலுத்தவில்லை. கடந்த 2018, ஜனவரி 30ம் தேதி வரை அவர், 47 ஆயிரத்து 204 கோடி ரூபாய் மோசடி செய்திருந்தார். இது தொடர்பாக சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். கடந்த 2019 நவம்பரில் சஞ்சங் சிங்காலை கைது செய்த அமலாக்கத் துறை, அவருடைய 4423 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியது. கடந்த 2020ம் ஆண்டு ஜனவரியில் டெல்லி நீதிமன்றம் சிங்காலுக்கு ஜாமின் வழங்கியது.

இந்நிலையில், சஞ்சய் சிங்காலின் ‘பூஷண் ஏர்வேஸ் சர்வீஸஸ்’ நிறுவனத்தின் 30.91 கோடி ரூபாய் மதிப்புள்ள சிறிய ரக விமானத்தை அமலாக்கத் துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.