பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்: நாராயணசாமி

பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து கட்சி தலைமையின் ஒப்புதல் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என்று, புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசின் 8 ஆண்டு காலம் சாதனை இல்லை, வேதனை தான். மோடி மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. மோடி சுயவிளம்பரங்களே தேடிக்கொள்கிறார். 2024 பொதுத்தேர்தலில் 15 கட்சிகள் இணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசு மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை சொல்கிறார். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மட்டுமல்லாது அனைத்து கட்சி தலைவர்களுக்கும் மோடி அரசு அமலாக்கத்துறை மூலம் மிரட்டல் விடுக்கிறது. அமலாக்கத்துறை பா.ஜ.க.வின் பொதுச்செயலாளராக செயல்படுகிறது.

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட விடுதலைப் புலிகள் மட்டுமல்லாது ஆதரவளித்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து கட்சி தலைமையின் ஒப்புதல் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். காங்கிரஸ் கட்சி தலைவர்களை நம்பி இல்லை, தொண்டர்களை நம்பித்தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.