விபத்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் 2 பேர் வேன் மோதி பலி!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே நள்ளிரவு நடந்த சாலை விபத்தினை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் உதவியாளர் உள்ளிட்ட இரு காவல்துறையினர் சுற்றுலா வேன் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

இராசிபுரம் தேசிய நெடுஞ்சாலை ஏ.கே. சமுத்திரம் அருகே சாலை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் மாற்றுப்பாதையில் செல்ல மணல் மூட்டைகளை அடுக்கி தகர டிரம்கள் வைத்திள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை அதிவேகமாக மதுரையில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற கார் மாற்றுப்பாதை போர்டுகளை கவனிக்காமல் நேரே சென்று தடுப்பு தட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் காவல்துறையினர் விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை தடையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருநள்ளாறு தஞ்சாவூரிலிருந்து இளம்பிள்ளை நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலா வேன் சாலை நெரிசல் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் இருவர் மீது வேகமாக வந்து மோதியது. இதில் புதுச்சத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகன், தலைமை காவலர் தேவராஜன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடம் வந்த ராசிபுரம் புதுச்சத்திரம் காவல் நிலையத்தை சேர்ந்த காவல்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் பாலரும் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து காவல் துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

முதலில் விபத்துக்குள்ளான கார் மதுரையில் இருந்து வந்ததாகவும் தூக்கக் கலக்கத்தில் வந்ததால் தடுப்பு வேலியில் மோதி நின்றதாக கூறப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளதை ஒழுங்குபடுத்த வந்த ராசிபுரம் காவல்துறையை சேர்ந்த தேவராஜ், சந்திரசேகர் இருவரும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி கொண்டிருக்கும்போது, அதிவேகமாக வந்த லாரியை நிறுத்தி விசாரித்ததில் ஓட்டுநர் குடிபோதையில் இருந்துள்ளார். ஓட்டுநரை கீழே இறங்கச் சொல்லி பேசிக் கொண்டிருக்கும் போது திருநள்ளாரில் இருந்து இளம்பிள்ளை நோக்கி வந்த சுற்றுலா வேன் காவலர்கள் மீது அதி பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வேன் விபத்தில் உயிரிழந்த காவலர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார். விபத்து குறித்து கேட்டறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தொலைபேசியில் தொடர்பு கொண்டு இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் தேவராஜன் ஆகியோரின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஷ்குமார் மற்றும் காவல் துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் பி.தாமரைக்கண்ணன் ஆகியோரை நேரில் சென்று உயிரிழந்த காவலர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தவும், அவர்களது குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும், போலீசாரின் குடும்பத்தைச் சார்ந்த ஒருவருக்கு கருணை அடிப்படையில் இரண்டு அரசுப் பணி வழங்கிடவும், விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோருக்கு, உயர்தர சிகிச்சை வழங்கிடவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.