பேரணியாக அமலாக்கத்துறை அலுவலகம் செல்கிறார் ராகுல்காந்தி!

ராகுல்காந்தி தலைமையில் அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி காங்கிரசார் அமைதிப்பேரணி செல்வர் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

நேஷன் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் முன் திரண்ட தொண்டர்கள் ராகுலுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். போலீசார் சிலரை கைது செய்துள்ளனர்.

இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா கூறுகையில், கோழைத்தனமான மோடி அரசு, டெல்லியில் பல போலீஸ் தடைகளையும், போலீஸ் அதிகாரிகளையும் நிலைநிறுத்தி, அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை விதித்துள்ளது. மோடி அரசை காங்கிரசால் அசைக்கப்பட்டுள்ளது என்பதை இது நிரூபிக்கிறது. அரசியலிமைப்பின் பாதுகாவலர்களான நாங்கள் எதற்கும் பயப்பட மாட்டோம். ராகுல்காந்தி தலைமையில் அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி காங்கிரசார் அமைதியாக பேரணி செல்வர் என்று கூறியுள்ளார்.