2வது நாளாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ராகுல் ஆஜர்!

அமலாக்கத்துறை விசாரணைக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் இரண்டாவது நாளாக ஆஜரானார்.

‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வாங்கியதில் நடைபெற்ற மோசடி தொடர்பான வழக்கில், காங்கிரஸ் எம்.பி., ராகுலிடம், அமலாக்கத் துறையினர் விரிவான விசாரணையை நடத்தினர். 11 மணி நேரம் நடந்த விசாரணையில், அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் ராகுல் திணறியதாக தெரிகிறது.

இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் ராகுலிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்னர் காங்கிரஸ் தலைமையகம் சென்று கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன், ஆலோசனை நடத்திய ராகுல், பின்னர் அங்கிருந்து அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சென்றார்.

ராகுலிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரன்தீப் சுர்ஜிவாலா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், இளைஞர் காங்கிரசார், தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.