காவல் துறையினர் மீதான குற்றச்சாட்டுகளை பொறுத்துக்கொள்ள முடியாது: ஐகோர்ட்

காவல் துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் சமீப நாட்களில் அதிகமாக உள்ளதாகவும், இவற்றை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காவலர் குடியிருப்பு ஒன்றில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி 2014 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து காவல் துறையை சேர்ந்த மாணிக்கவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், 2014 ஆம் ஆண்டிலேயே இடத்தை காலி செய்யுமாறு உத்தரவிட்டு, அதை உயர் நீதிமன்றம் உறுதி செய்த பிறகு இந்த ஆண்டு தான் இடத்தை காலி செய்திருப்பதாகவும், அதன் காரணமாக அவர் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் விளக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

உயர் அதிகாரிகள் எதிர்பார்த்த அளவு ஒழுக்கத்தை பேணாதபோது, அது காவல் துறைக்கு எதிராக பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். அவர்கள் கீழ் உள்ளவர்களை கட்டுப்படுத்த இயலாவிட்டால், நன்மதிப்பை இழக்கவும் நேரிடும் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் மத்தியில் காவல் துறை மீது ஏற்கெனவே பல குற்றச்சாட்டுகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ள நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், உயர் அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ வாகனங்களிலேயே கருப்புப் பிலிம் பயன்படுத்துவது, காவல்துறை பெயரை அவர்களது வாகனங்களில் தவறாக பயன்படுத்துவது, தங்கள் வீடுகளில் ஆர்டர்லி என்ற பெயரில் காவல் துறையினரை துஷ்பிரயோகம் செய்வது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் மக்களிடையே உள்ளதாகவும், ஆனால் அரசால் கவனிக்கப்படாமல் இருப்பதாகவும் நீதிபதி தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றில் பல குற்றச்சாட்டுகள் பொதுவெளியில் கிடைத்தாலும், அரசாங்கத்தால் கவனிக்கப்படாமல் அல்லது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொது தளத்தில் தகவல்கள் இருக்கும்போது, காவல் துறை உயர் அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்தவும், அவர்களின் தலைமையின் கீழ் செயல்படுபவர்களின் ஒழுக்கத்தைப் பேணுவதற்கும், சமூகத்தில் பொது ஒழுங்கை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக நீதிபதி தமது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற குற்றச்சாட்டுகள் சமீப நாட்களில் அதிகமாக உள்ளதாகவும், இவற்றை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், இவை சீரழிவுக்கும் மற்றும் அரசியலமைப்பு மீறலுக்கும் வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

காவல்துறையினர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததில் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், பிரச்னைக்கு தீர்வு காணவும், அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 21ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.