தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல்நல பாதிப்பு காரணமாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே கட்சி நடவடிக்கைகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார். கட்சி பணிகளை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கவனித்து வருகிறார். பெரும்பாலும் வீட்டிலேயே ஓய்வில் இருக்கும் விஜயகாந்த், உடல் பரிசோதனைக்காக அவ்வபோது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்படி நேற்றிரவு அவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை கழகம் தெரிவித்துள்ளது. வழக்கமாக மேற்கொள்ளும் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.