ஜூன் 25ஆம் தேதி மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: வைகோ!

மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜூன் 25ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மகன் துரை வைகோ சில மாதங்களுக்கு முன்னதாக கட்சியின் தலைமைக் கழக செயலாளர் என்ற பதவியேற்றார். வைகோவுக்கு அடுத்தபடியாக மதிமுகவின் தலைமையை அலங்கரிப்பதற்காகவே துரை வைகோ உள்ளே கொண்டு வரப்பட்டுள்ளார் என விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு சிலர் கட்சியிலிருந்து விலகினர். சிலர் அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்பட்டது. வயது முதிர்ச்சி காரணமாக பழைய வேகத்துடன் வைகோ செயல்படாவிட்டாலும் தொடர்ந்து அரசியல் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடர்பான அறிவிப்பை வைகோ வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “மதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழக செயலாளர்கள் கூட்டம் வருகிற 25ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெறும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், மதிமுகவை வலுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாகவும், மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில், கட்சியினர் மேற்கொள்ள வேண்டிய ஆயத்த பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.