ஜூலை 18-இல்நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 18-ஆம் தேதி தொடங்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடா்பான இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று தெரிகிறது. இந்தக் கூட்டத் தொடரின்போது குடியரசு துணைத் தலைவா் தோ்தலும் நடைபெறும். ஏனெனில், குடியரசு துணைத் தலைவரின் பதவிக் காலம் ஆகஸ்ட்10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இது தொடா்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இதனைப் பரிந்துரைத்துள்ளது. அதே நேரத்தில் இது தொடா்பான இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது. ஜூலை 18-ஆம் தேதிதான் குடியரசுத் தலைவா் தோ்தலும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக தலைவா்களின் சா்ச்சை கருத்தால் சா்வதேச அளவில் இந்தியாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி, நேஷனல் ஹெரால்டு வழக்கு, பணவீக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் இந்தக் கூட்டத் தொடரில் அதிக முக்கியத்துவம் பெறும் என்று கருதப்படுகிறது.