நாளை நாடு முழுவதும் கவர்னர் மாளிகை முற்றுகை: காங்கிரஸ்

நாடு முழுவதும் உள்ள கவர்னர் மாளிகைகள் நாளை முற்றுகையிடப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

நேஷனல் ஷெரால்டு நிதிமுறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம், அமலாக்கத்துறை தொடர்ந்து 3வது நாளாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சியினர் மூன்றாவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, டெல்லி போலீசார் காங்கிரஸ் அலுவலகத்திற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இது சட்டவிரோத செயல் ஆகும். இதில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், அவர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா வலியுறுத்தினார்.

டெல்லி போலீசாரின் இந்த அத்துமீறலைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை நாடு முழுவதும் உள்ள கவர்னர் மாளிகைகள் முற்றுகையிடப்படும் என தெரிவித்த ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அதோடு, மாவட்ட அளவிலும் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.