மெரினா, சென்டிரல் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

சென்னையில் போராட்டம் நடைபெறுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவில் காந்தி சிலை அருகே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளது. சென்னை, ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் பணிபுரியும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளது. உத்தரப்பிரதேசம், பீகாரில் ரயில்கள், பஸ்களை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொழுத்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும், ராஜஸ்தான், அரியானா, தெலுங்கான உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் வலுத்து வருகிறது. போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் போராட்டம் நடைபெறுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவில் காந்தி சிலை அருகே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் தமிழகத்திலும் திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராக ரெயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேர் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அதிவீர பாண்டியன், துணை சூப்பிரண்டு முத்துக்குமார் தலைமையிலான ரெயில்வே போலீசார், மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை சென்னை கோட்ட மூத்த பாதுகாப்பு கமிஷனர் செந்தில் குமரேசன் தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர், பெரியமேடு, பூக்கடை பகுதி போலீசார் என மொத்தமாக 200-க்கும் மேற்பட்ட போலீசார் சென்டிரல் ரெயில் நிலையத்தின் வளாகத்திலும், அதனை சுற்றியும் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.