நம்ப வைத்து கழுத்தை அறுப்பது போல் தி.மு.க. செயல்படுகிறது: சீமான்

நம்ப வைத்து கழுத்தை அறுப்பது போல் தி.மு.க. செயல்படுகிறது என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டினார்.

மதுரையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு பா.ஜ., கட்சியை சேர்ந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை தி.மு.க., அழைத்தது. பா.ஜ., ஆளும் மாநிலங்களில் கூட இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பிரதமர் மோடி, துணை ஜனாதிபதியை அழைத்ததில்லை. அப்படி இருக்கும் சூழ்நிலையில் ஆர்.எஸ்.எஸ்., ஐ தி.மு.க. குறை கூறுவது நியாயம் இல்லை.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு வழங்கிய தீர்ப்பை மற்றவருக்கு வழங்கலாம் என நீதியரசர் தெரிவித்தார். ஆனால் ராஜிவ் கொலையாளிகள் வழக்கில் தி.மு.க., மறுபடியும் நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு போட உள்ளதாக தெரிவித்துள்ளது. நம்ப வைத்து கழுத்தை அறுப்பது போல் தி.மு.க.,வின் செயல்பாடு உள்ளது. அவர்களின் விடுதலை தொடர்பாக நாம் தமிழர் கட்சி நீதிமன்றம் வரை சென்று போராடும். இவ்வாறு அவர் கூறினார்.