பா.ஜனதாவுக்கென ஆயுதப்படை உருவாக்க முயற்சி: மம்தா பானர்ஜி

‘அக்னிபத்’ திட்டத்தை பயன்படுத்தி, பா.ஜனதாவுக்கென சொந்தமாக ஒரு ஆயுதப்படையை உருவாக்க முயற்சி நடக்கிறது என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறினார்.

மேற்கு வங்காள சட்டசபையில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேசியதாவது:-

‘அக்னிபத்’ திட்டத்தை பயன்படுத்தி, பா.ஜனதாவுக்கென சொந்தமாக ஒரு ஆயுதப்படையை உருவாக்க முயற்சி நடக்கிறது. 4 ஆண்டு கால பணிக்கு பிறகு அக்னி வீரர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் கையில் ஆயுதங்களை கொடுக்க பா.ஜனதா விரும்புகிறது. அவர்களை தங்கள் கட்சி அலுவலக காவலாளிகளாக நியமிக்க பா.ஜனதா திட்டமிடுகிறது போலும். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக இத்தகைய திட்டங்களை அறிவித்து மக்களை பா.ஜனதா முட்டாளாக்க பார்க்கிறது. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறிவிட்டு, தற்போது முட்டாள்தனமான அறிவிப்புகளை வெளியிடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் நபிகள் நாயகத்துக்கு எதிராக சர்ச்சை கருத்து தெரிவித்த பா.ஜனதா முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மாவை கண்டித்து மேற்கு வங்காள சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை சட்டசபை விவகார மந்திரி பார்த்தா சட்டர்ஜி தாக்கல் செய்தார். முன்கூட்டியே திட்டமிடப்படாமல் கொண்டுவரப்பட்டது. கோர்ட்டில் வழக்கு இருப்பதால், நுபுர் சர்மாவின் பெயர், தீர்மானத்தில் குறிப்பிடப்படவில்லை. தீர்மானத்தின் மீது பேசிய முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ”சில தலைவர்கள் பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மதங்களுக்கிடையே வெறுப்பை பரப்பும் மிகப்பெரிய சதியில் இது ஒரு அங்கம்” என்று கூறினார். தீர்மானத்தை கண்டித்து பா.ஜனதா உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.