ராணுவத் தேர்வு முறை, படைப் பிரிவில் மாற்றமில்லை: அனில் புரி

அக்னிபத் திட்டம் நடைமுறைக்கு வருவதால் ராணுவத் தேர்வு முறையிலும், படைப் பிரிவு அமைப்பிலும் எவ்வித மாற்றமும் இருக்காது என லெப்டினன்ட் ஜெனரல் அனில் புரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளரான லெப்டினண்ட் ஜெனரல் அனில் புரிடெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அக்னிபத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதால் ராணுவ ஆள்சேர்ப்பு முறையில் எவ்வித மாற்றமும் இருக்காது. பாரம்பரிய படைப் பிரிவு அமைப்பு தொடரும். ராணுவத்தில் சேரும் இளைஞர்களில் 75 சதவீதம் பேருக்கும் நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்கும் இந்தத் திட்டம், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துடன் முப்படைகளும் இணைந்து நீண்ட காலம் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இத்திட்டம் மிகவும் தேவையான சீர்திருத்தம்.

கடந்த 1989 முதல் ஏராளமான குழுக்கள் இந்த சீர்திருத்தத்தைப் பரிந்துரை செய்துள்ளன. அக்னிபத் திட்டத்தை இறுதிப்படுத்துவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட அனைவரிடமும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அக்னிபத் திட்டத்தின் கீழ் சேர்க்கை பெறும் அனைத்து விண்ணப்பதாரர்களும் தாங்கள் எந்தவித வன்முறையிலும் பங்கெடுக்கவில்லை என்பதை உறுதியளிக்க வேண்டும். ராணுவத்தில் தீவைப்பதற்கும், வன்முறைக்கும் இடமில்லை. விண்ணப்பதாரர்களின் பின்னணியை காவல் துறை சரிபார்ப்பது என்பது காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை. அக்னிபத் திட்டம் ராணுவத்தின் தாக்குதல் திறனை அதிகரிக்கும். அக்னிவீரர்களுக்கான பயிற்சிக்காலம் குறைவாக இருந்தாலும் பயிற்சியில் எந்தக் குறையும் இருக்காது. அவர்கள் சிறப்பாக பணியாற்றினால் விருதுகள் பெறவும் தகுதி உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் பிரதமர் மோடியை முப்படைகளின் தலைமை தளபதிகள் நேற்று தனித்தனியாக சந்தித்து ‘அக்னிபத்’ பற்றி ஆலோசித்தனர். இந்நிலையில் ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே விமானப்படை தலைமை தளபதி சவுத்ரி கடற்படை தலைமை தளபதி ஹரி குமார் ஆகியோர் புதுடெல்லியில் பிரதமர் மோடியை தனித்தனியே சந்தித்தனர். அவர்கள் பிரதமருடன் அக்னிபத் திட்டம் பற்றி ஆலோசித்தனர்.