அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்கும் சோனியா!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் நேரில் ஆஜராவதற்கு ஏதுவாக விசாரணையை சிறிது நாட்கள் ஒத்தி வைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா கோரிக்கை விடுத்துள்ளார்.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவன விற்பனையில் நடந்த சட்ட விரோத பண மோசடி குறித்து, அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக, கடந்த 3 ஆம் தேதி ஆஜராகக்கோரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், 13 ஆம் தேதி ஆஜராகக் கோரி, அவரது மகனும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்திக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்றால் சோனியா காந்தி பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் விசாரணையை தள்ளி வைக்கும்படி கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து இன்று (ஜூன்23) ஆஜராகும்படி சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. பின்னர், சோனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் சமீபத்தில் வீடு திரும்பினார்.

இந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராவதை சில வாரங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று அமலாக்கத் துறைக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார். இந்தத் தகவலை காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், “கொரோனா மற்றும் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டதால் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என்று சோனியா காந்திக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். எனவே, தான் முழுமையாக குணம் அடையும் வரை சில வாரங்கள் அமலாக்கத்துறை முன் ஆஜர் ஆவதை தள்ளி வைக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்” என்று தெரிவித்து உள்ளார்.