ஆறுமுகசாமி கமிஷனுக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் நீட்டிப்பு!

ஜெயலலிதா மரணம் தொடர்பான இறுதி அறிக்கையை ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் 2017 செப்டம்பர் மாதம் தனது விசாரணையைத் தொடங்கியது. விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், மருத்துவர்களை விசாரிக்கும் போது மருத்துவ குழு வல்லுனர்கள் முன்னிலையில் விசாரிக்க வேண்டும் என்று ஆணையத்திடம் அப்பல்லோ நிர்வாகம் வலியுறுத்தியதை ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை. இதை தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்ததால் இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடைபெறாமல் கால நீட்டிப்பு செய்யப்பட்டது.

இதன் பின்பு, எய்ம்ஸ் இயக்குனர் பரிந்துரையின் படி 6 பேர் மருத்துவக்குழு அமைத்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு விசாரணையை மீண்டும் ஆணையம் தொடங்கியது. இதில் அப்பல்லோ மருத்துவர்கள் உள்பட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை மேற்கோண்டு, இறுதி விசாரணையும் ஆறுமுகசாமி ஆணையம் ஏப்ரல் 26 ஆம் தேதி நிறைவு செய்தது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் 159 பேரிடம் விசாரணை மேற்கொண்டு, அதற்கான அறிக்கை தயாரிக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வந்தது. நீதிபதி விசாரணை முடிந்த பின்பு அறிக்கை தயாரிக்கும் பணிக்காக கடந்த 12 நாட்களாக ஆணையத்தில் இருந்து பணியை மேற்கொண்டார். மேலும், இறுதியாக ஆணையம் விசாரணை மேற்கொண்ட போது, எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் காணொலி காட்சி மூலமாக பங்கேற்றனர். அவர்கள் தாயாரித்த அறிக்கையும் இன்னும் ஆணையத்திடம் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் ஆணையத்திற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்ததால், அறிக்கை இறுதி செய்து அரசிடம் சமர்பிக்க, மேலும் 1 மாதம் கால அவகாசம் கேட்டு ஆறுமுகசாமி ஆணையம் அரசுக்கு கடிதம் எழுதியது. இதனை பரிசீலித்த அரசு, ஒரு மாதம் 9 நாட்கள் கால அவகாசம் கொடுத்து, 13வது முறையாக கால நீட்டிப்பு செய்துள்ளது. இந்த காலத்திற்குள் அறிக்கையை இறுதி செய்து ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி வழங்குவதற்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.