கனவுகளை நிறைவேற்ற இந்தியா தயாராகி வருகிறது: பிரதமர் மோடி

இந்தியா இப்போது முன்னேற்றம் வளர்ச்சி மற்றும் அதன் கனவுகளை நிறைவேற்ற தயாராகி வருகிறது என, ஜெர்மனி தலைநகர் முனீச் நகரில் இந்தியர்களிடையே பிரதமர் மோடி உரையாடினார்.

ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜெர்மன் சென்றுள்ள பிரதமர் தலைநகர் முனீச் நகரில் இந்தியர்களிடையே உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய ஜனநாயக வரலாற்றில் அவரசநிலை ஒரு கரும்புள்ளி. கலாச்சாரம், உணவு,. உடை, பன்முகத்தன்மை உள்ளிட்டவை நமது ஜனநாயகத்தை துடிப்பானதாக்குகிறது. தற்போது 4வது தொழிற்புரட்சியில் பின்தங்காமல் இந்தியா உலகையே வழிநடத்தி வருகிறது. 90 சதவீதத்தினர் கொரோனா இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

99 சதவீத கிராமங்களில் சமையல் எரிவாயுவை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் 80 கோடி ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்திய விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறி வருகின்றனர். பருவநிலை மாற்றம் என்பது இந்தியாவின் கொள்கைகள் மட்டுமல்லாது நிலையான காலநிலை நடைமுறைகள் இந்திய மக்களின் வாழக்கையின் ஒரு அங்கமாகி விட்டன. நாட்டை தூய்மையாக வைத்திருப்பது தங்கள் கடமை என மக்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளனர். இந்தியா இப்போது முன்னேற்றம் வளர்ச்சி மற்றும் அதன் கனவுகளை நிறைவேற்ற தயாராகி வருகிறது. பெட்ரோலில் 10 சதவீதம் அளவிற்கு எத்தனாலை கலப்பது என்பதை இலக்காக வைத்திருந்தோம் அதனை கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னதாகவே அடைந்து விட்டோம். இவ்வாறு அவர் உரையாடினார்.

இந்நிலையில் ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் மோடி, அர்ஜெண்டினா அதிபரை சந்தித்து பேசினார். அர்ஜெண்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டசை சந்தித்த பிரதமர் மோடி, இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகள், அரசியல்,பொருளாதாரம், கலாச்சாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் நடத்திய இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளை சேர்ந்த உயர்மட்டக்குழுவினரும் கலந்து கொண்டனர்.