ஆளுநர் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனுத்தாக்கல்!

பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது

மகாராஷ்டிர மாநில அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. ஆளும் கூட்டணி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அசாம் மாநிலத்தில் உள்ளனர். அவர்களுடன் இணைந்து பாஜக ஆட்சியமைக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை முதல்வர் உத்தவ் தாக்கரே நாளைக்குள் நிரூபிக்குமாறு மாநில ஆளுநர் பிஎஸ் கோஷியாரி உத்தரவிட்டுள்ளார். நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளும் கூட்டணி அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க மகாராஷ்டிரா ஆளுநர், உத்தவ் தாக்ரே அரசுக்கு உத்தரவிட்டிருந்தற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனுத்தாக்கல் செய்துள்ளது. சிவசேனாவின் தலைமை கொறடா சுனில் பிரபு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று மாலை விசாரணைக்கு வருகிறது.