சென்னை ஜாபர்கான்பேட்டையில் நேற்று திங்கள்கிழமை இரவு தந்தை பெரியார் சிலை மீது ஏறி நின்று காலணியால் ஒருவர் அடித்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த நபரை சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்து மதிமுகவினர் போலீசில் ஒப்படைத்தனர். சென்னையில் தந்தை பெரியார் சிலையை அவமதித்த நபரையும் அந்த நபருக்கு பின்னால் இருக்கும் கும்பலையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தந்தை பெரியார் அவர்கள் மீது அவதூறுகளை அள்ளி வீசி இழித்தும் பழித்தும் பேசி வருகிற ஒரு கும்பல், அமைதி பூங்காவான தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற சதித்திட்டங்களை அரங்கேற்றி வருகின்றது. இதன் பின்னணியில்தான் இன்று(நேற்று) இரவு 8 மணி அளவில் சென்னை ஜாபர்கான்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவில் கங்கை அம்மன் தெரு சந்திப்பில் தென் சென்னை மேற்கு மாவட்ட மதிமுக சார்பில் நிறுவப்பட்ட பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சிலை மீது ஏறி நின்று காலணியால் அடித்திருக்கிறார்கள். இச்செயல் கடும் கண்டனத்துக்குரியதாகும். உடனடியாக அந்தப் பகுதியில் உள்ள மறுமலர்ச்சி திமுக நிர்வாகிகள் பெரியார் சிலையை அவமதித்த நபரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள்.
தந்தை பெரியார் சிலையை அவமதித்த நபர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரியும், இதன் பின்னணியில் உள்ள கும்பலை கைது செய்யக்கோரியும் தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சைதை சுப்பிரமணி தலைமையில் மதிமுகவினர் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையின் பொறுப்பில் இருக்கும் நபர்கள் மீது கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்வதோடு, பெரியார் சிலையை அவமதித்த கும்பலை குண்டர் சட்டத்தின் கீழ் உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும்.
தந்தை பெரியார் அவர்களின் கோட்பாடுகளுக்கு எதிராக கருத்தியல் ரீதியாக விமர்சனங்களை முன் வைப்பது என்பது வேறு. ஆனால் பெரியாரை இழிவு படுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது. எனவே தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற துடிக்கும் கூட்டத்தின் சதி திட்டத்தை முறியடித்து தக்கப் பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.