ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பகல் 1 மணி வரை 42.41% வாக்குகள் பதிவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.41 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில், இண்டியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மா.கி.சீதாலட்சுமி வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர்கள் உட்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (பிப்.5) காலை 7 மணிக்கு தொடங்கியது. இத்தேர்தலில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக, 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 9 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் முன்னிலையில் காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலை 7 மணி முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். காலை 9 மணி நிலவரப்படி 10.95% ஆக இருந்த வாக்கு சதவீதம், 11 மணி நிலவரப்படி 26.03% ஆக இருந்தது. இந்நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி அங்கு 42.41% வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் ஈரோடு சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பு பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்திய பின் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் கூறியதாவது:-

வட மாநிலங்களில் பாஜகவினர் சிலரை ராஜினாமா செய்ய வைத்து, சில தொகுதிளில் தேர்தல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை, திருமகன் ஈவெரா, ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோரது மறைவினால் ஈரோடு கிழக்கு தொகுதியில் இரு முறை இடைத்தேர்தல் நடந்துள்ளது. இது திணிக்கப்பட்ட தேர்தல் அல்ல.

எனவே, பொதுமக்களிடம் தேர்தல் குறித்து எந்த அதிருப்தியும் இல்லை. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 33 வார்டுகளில் நானும் அமைச்சர் முத்துசாமியும், 140 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மக்களை நேரடியாகச் சந்தித்து வாக்கு சேகரித்துள்ளோம். அவர்கள் இந்த ஆட்சியின் மீது எந்த அதிருப்தியும் தெரிவிக்கவில்லை. சில இடங்களில், சில கோரிக்கைகளை முன் வைத்தனர். அவற்றை செய்து தருவதாக நாங்கள் உறுதி அளித்துள்ளோம்.

ஈரோடு நகரில் 200 கிலோ மீட்டர் அளவுக்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின்போது 75 சதவீத பணிகள் மட்டுமே பாதாள சாக்கடை திட்டத்தில் செய்யப்பட்டது. அதையும் நாங்கள் நிறைவேற்றி உள்ளோம். ஈரோடு மக்களின் குரலுக்கு செவிமடுத்து, அமைச்சர் முத்துசாமி, உடனுக்குடன் ஈரோடு மாவட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு வருகிறார். எனவே, மக்களிடம் பெரும் ஆதரவு இருக்கிறது.

எங்களது நான்காண்டு திமுக அரசின் சாதனைகளை குறிப்பாக தமிழ் புதல்வன், புதுமைப்பெண், மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம் போன்ற பல திட்டங்களை கூறி வாக்குகளை சேகரிக்கிறோம். திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மிகப்பெரிய வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம்

கடந்த இடைத்தேர்தலின் போது, அரசின் மீது சில குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் சுமத்தின. அதற்கு பதில் அளிக்க முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் இங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த இடைத்தேர்தலில் உள்ளூர் கட்சி நிர்வாகிகளை கொண்டு தேர்தலை சந்திக்க முதல்வர் மற்றும் துணை முதல்வர் உத்தரவிட்டனர். எனவே, வெளி மாவட்டங்களில் இருந்து அமைச்சர்களோ வேறு நிர்வாகிகளோ தேர்தல் பிரச்சாரத்திற்கு வரவில்லை.எதிர்க்கட்சிகள் தேர்தல் புறக்கணிப்பு என்பது அவர்களுக்கு விருப்பம். ஈரோடு கிழக்கில் நேரடியாக கட்சிகள் களம் காணாமல், வேறு சிலரை வைத்து தேர்தலை சந்திக்கிறார்கள் என்று முதல்வர் கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.