உதய்பூர் படுகொலை: குற்றவாளி மீது நீதிமன்றத்தில் தாக்குதல்!

ராஜஸ்தானில் உதய்பூர் படுகொலை சம்பவத்தில் கைதான குற்றவாளிகளில் ஒருவரை நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் நடந்தது.

ராஜஸ்தானில் உதய்பூரைச் சேர்ந்த டெய்லரான கன்னையா லால், 28ம் தேதி பட்டப்பகலில் இரண்டு பேரால் கழுத்து துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். கொலையாளிகள் கொலை செய்வதை, ‘வீடியோ’ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். முஸ்லிம் மதம் குறித்து, பா.ஜ.,வின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுாபுர் சர்மா, சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார். அவருக்கு ஆதரவாக, சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டதால், கன்னையா லாலை கொன்றதாக வீடியோவில் கொலையாளிகள் கூறியுள்ளனர். இந்தப் படுகொலை, நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்தக் கொலையில் ஈடுபட்ட ரியாஸ் அக்தாரி மற்றும் கவுஸ் முகமது ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். மேலும், மூன்று பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் இன்று கைதான குற்றவாளிகளில் ஒருவனர ஜெய்ப்பூர் தேசிய புலனாய்வு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை மீண்டும் சிறைக்கு வேனில் கொண்டு செல்ல முயன்றனர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் குவிந்திருந்த பொதுமக்கள் குற்றவாளியை சரமாரியாக தாக்கி அவனது சட்டையை கிழித்தனர். பாதுகாப்புக்கு வந்த போலீசார் அவனை பாதுகாப்பாக வேனில் ஏற்றி சிறைக்கு கொண்டு சென்றனர். இதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.