தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. ‘பவர் பாண்டி’ படத்துக்குப் பிறகு அவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘ராயன்’ வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் கவனிக்க வைத்தது, அதனைத் தொடர்ந்து அவர் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் பாவிஷ், அனிகா சுரேந்திரன், ப்ரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வுண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தினை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இதற்கு ஒளிப்பதிவாளராக லியோ பிரிட்டோம், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். பிப்ரவரி 21-ல் திரையரங்குகளில் வெளியாகும். இப்படத்தின் ட்ரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது. சமகால காதலைப் பற்றி பேசும் படமாக இப்படம் இருக்கும் என்பதை ட்ரெய்லர் மூலம் அறிய முடிகிறது.
புதுமுகம் பாவிஷுக்கும் பிரியா பிரகாஷ் வாரியருக்கும் காதல் மலர்கிறது. அனிகா சுரேந்திரனுக்கு வேறொரு பையனுடன் திருமணம் நிச்சியிக்கப்படுகிறது. அனிகாவின் முன்னாள் காதலன் பாவிஷ். தனது முன்னாள் காதலி திருமணம் செய்துகொள்ளப் போவது அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
காதலுக்கும், காதல் தோல்விக்கும் இடையில் மாட்டிக்கொண்டு தவிக்கிறான் பாவிஷ். இன்றைய இளைஞர்களின் காதல் வாழ்க்கையை நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகரமான முறையில் வெளிப்படுத்துகிறது ட்ரெய்லர்.