காதலர் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ந் தேதி கொண்டாடுகிறோம். காதலுக்கு வயது ஒரு தடையில்லை. எந்த வயதில் வேண்டுமானாலும், யார் மீது வேண்டுமானாலும் யாருக்கும் காதல் வரலாம். ஒருவர் மீது ஒருவர் தங்கள் அன்பை வெளிப்படுத்துவதே காதல். அன்பினை வெளிப்படுத்தும் நாளே இந்த காதலர் தினம்.
காதலர் தினத்துக்கு திரையுலகினரில் இருந்து அரசியல்வாதிகள் வரை தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் காதலர் தினம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட காதலர் தின வாழ்த்து மடலில் கூறியுள்ளதாவது:-
உலகை அழிக்கும் ஆயுதம் ஆயிரம் உண்டு; ஆனால்
உலகை உருவாக்கும் பேராயுதம் காதல் மட்டும்தான்!
தன்னைப்போல் பிறரையும் நேசி
என்றார் இறைமகன் ஏசு!
அண்டை அயலானுக்கும் அன்புசெய் என்றார்
இறை தூதர் நபிகள் நாயகம்!
அன்பே சிவம் என்றார் திருமூலர்!
எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றது!
எல்லா மனிதர்களையும் அன்புதான் பாதிக்கின்றது!
கடவுளை மறுக்கும் மனிதர்கள் கூட காதலை மறுப்பதில்லை!
என்னால் எல்லாவற்றையும் கொடுக்க முடியாது;
அன்பால் எல்லாவற்றையும் கொடுக்க முடியும்!
காதலில் ஒன்றுமில்லை;
ஆனால் காதல் இல்லாமல் உலகத்தில் ஒன்றுமில்லை;
காதலுக்காக யாரும் சாகக் கூடாது;
ஆனால் காதலிக்காமலும் யாரும்
சாகக் கூடாது!
ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்.
காதலினால் சாகாமலிருத்தல் கூடும் கவலைபோம்
அதனாலே மரணம் பொய்யாம்.
– பெரும்பாவலர் பாரதி
நிலமிழந்து போனால்
பலமிழந்து போகும்
பலமிழந்து போனால்
இனமழிந்து போகும்
ஆதலால், மானுடனே
தாய்நிலத்தைக் காதலிக்க கற்றுக்கொள். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.